search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெருந்துறை அருகே சொத்து தகராறில் மூதாட்டி கொலை செய்யப்பட்டாரா?: போலீசார் விசாரணை
    X

    பெருந்துறை அருகே சொத்து தகராறில் மூதாட்டி கொலை செய்யப்பட்டாரா?: போலீசார் விசாரணை

    பெருந்துறை அருகே தோட்டத்தில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள திங்களூர், வெட்டையன்கிணர் ரோடு, கொட்டக்காடு பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 56).

    இவருக்கு சொந்தமான தோட்டம், அதே பகுதியில் உள்ள ஒட்டச்சிகாடு என்ற இடத்தில் உள்ளது. இந்த தோட்டத்தில் தென்னை மற்றும் வாழை பயிரிட்டு உள்ளார்.

    இவைகளுக்கு தண்ணீர் காட்டுவதற்காக நேற்று காலை துரைசாமி தோட்டத்திற்கு சென்றார்.

    அப்போது சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் தலையில் பாட்டிலால் அடித்து கொலை செய்யப்பட்டு கால்களை கட்டி ஒரு தென்னை மரத்தில் தலை கீழாக தொங்க விடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இது குறித்து திங்களூர் போலீசாருக்கு கொடுக்கப்பட்ட தகவலின் பேரில் கோபி டி.எஸ்.பி. செல்வம், இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் யசோதா ஆகியோர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற் கொண்டனர்.

    கொலையுண்ட மூதாட்டியின் தலையில் கொலையாளி பாட்டிலால் பலமாக அடித்துள்ளார். மேலும் அருகில் கிடந்த கட்டைகளை உடைத்து மூதாட்டியின் வாயில் திணித்துள்ளார்.

    கொலை செய்யப்பட்ட மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை.

    அந்த மூதாட்டி வெளியூர் அல்லது வெளி மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் சொத்து தகராறில் அவரை கொன்று பிணத்தை இங்கே கொண்டு வந்து போட்டு சென்றிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். அதன் பேரில் விசாரணை நடக்கிறது. மேலும் அந்த மூதாட்டி யார்? என்று கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர். இதற்காக திங்களூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு கொலையுண்ட மூதாட்டியின் புகைப்படம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    அந்த புகைப்படத்தை வைத்து அந்த மூதாட்டி தங்கள் பகுதியை சேர்ந்தவரா? என்று அந்தந்த பகுதி கிராம நிர்வாக அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். #tamilnews

    Next Story
    ×