search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல், டீசல் விலை லிட்டர் ரூ.100-ஐ தாண்டி விடும்: ராமதாஸ் அறிக்கை
    X

    பெட்ரோல், டீசல் விலை லிட்டர் ரூ.100-ஐ தாண்டி விடும்: ராமதாஸ் அறிக்கை

    பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டர் ரூ.100-ஐ தாண்டி விடும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்தியா முழுவதும் மக்கள் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், அதைப் பயன்படுத்திக் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் சத்தமின்றி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக் கொண்டிருக்கின்றன.

    கடந்த ஜூலை 1-ந்தேதி நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.65.46 ஆக இருந்தது. இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.73.89 ஆகும். அதாவது கடந்த 6 மாதங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.8.45 உயர்ந்திருக்கிறது. இதேகாலகட்டத்தில் டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.56.13 என்ற அளவிலிருந்து ரூ.65.23 ஆக அதாவது ரூ.9.10 உயர்ந்துள்ளது. இதை சாதாரண மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது.

    ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் அடக்கவிலை 76.26 அமெரிக்க டாலர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில் டீசல் நிர்ணயம் தொடர்பான புள்ளி விவரத்தில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 81.57 டாலர் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரே மாதிரியான கச்சா எண்ணெய்க்கு இரு விலைகளை புரிந்து கொள்ள முடியவில்லை.

    எரிபொருட்களின் விலை தினமும் நிர்ணயிக்கப்படும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8.45 உயர்த்தப்பட்ட நிலையில், டீசல் விலை ரூ.9.10 உயர்த்தப்பட்டுள்ளது. இரு எரிபொருட்களுக்கும் இடையிலான விலை வித்தியாசம் கடந்த செப்டம்பர் மாதம் ரூ.11.10 ஆக இருந்தது. ஆனால், இப்போது ரூ.08.66 ஆக குறைந்து விட்டது. டீசல் விலையை அதிகமாக உயர்த்துவதை நியாயப்படுத்த முடியாது.

    பன்னாட்டு சந்தையில் உயர்தரமான ப்ரெண்ட் வகை கச்சா எண்ணெயின் இன்றைய விலை பீப்பாய் 70 டாலர் மட்டுமே. ஆனால், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.73.89க்கும், டீசல் ரூ.65.23க்கும் விற்கப்படுகிறது. கடந்த 2008ஆம் ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் தான் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வகையில் ஒரு பீப்பாய் 147 டாலர் என்ற உச்சத்தைத் தொட்டது.

    அப்போதும் கூட இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.73.00 என்ற அளவிலேயே இருந்தது. ஆனால், இப்போது கச்சா எண்ணையின் விலை, அப்போதைய விலையில் பாதிக்கும் குறைவாக உள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருப்பதற்கு வரி விகிதம் கடுமையாக உயர்த்தப்பட்டதே காரணம்.

    இதேநிலை நீடித்தால் அடுத்த சில வாரங்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100 என்ற அளவைத் தாண்டி விடும். அவ்வாறு உயர்ந்தால் மக்கள் மட்டுமின்றி, அனைத்து தொழில்களும் பாதிக்கப்படும்; விலைவாசி கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உயர்ந்து விடும். பெட்ரோல், டீசலின் அடக்கவிலை ரூ.30க்கும் குறைவாக உள்ள நிலையில் அதை விட இரு மடங்குக்கும் கூடுதலான விலைக்கு விற்பனை செய்வதை ஏற்க முடியாது.

    எனவே, பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையின் கீழ் கொண்டு வருவதுடன், அவற்றிற்கு விலைக்காட்டுப்பாட்டை கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

    Next Story
    ×