search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூர் அரசு கல்லூரி விடுதியில் மாணவர்கள் மீது தாக்குதல்: 15 பேர் மீது வழக்கு
    X

    திருப்பூர் அரசு கல்லூரி விடுதியில் மாணவர்கள் மீது தாக்குதல்: 15 பேர் மீது வழக்கு

    திருப்பூர் அரசு கல்லூரி விடுதியில் மாணவர்கள் மீது தாக்குதல்: 3 மாணவர்கள் உள்பட 15 பேர் மீது வழக்குபதிவு
    திருப்பூர்:

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி வளாகத்தில் கடந்த 21-ந் தேதி கல்லூரிக்கு வரும் மாணவர்களுக்கும், விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் 5 மாணவர்கள் காயம் அடைந்தனர்.

    இந்த நிலையில் நேற்று விடுமுறை என்பதால் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு விடுதியில் மாணவர்கள் இருந்தனர். மாலை 4 மணியளவில் சுமார் 15 பேர் கொண்ட கும்பல் முகத்தில் கர்ச்சீப் அணிந்து கொண்டு விடுதிக்குள் புகுந்தனர். அவர்கள் கைகளில் வைத்திருந்த உருட்டுக் கட்டை வைத்து அறை கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

    மேலும் அங்கே நின்ற மாணவர்கள் மீதும் சரமாரியாக தாக்கினர். இதில் மாணவர்கள் விக்னேஷ் (வயது 20), சசிக்குமார் (19) ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது, இதையடுத்து அந்த கும்பல் கல்லூரி வளாகத்தில் உள்ள ஆதி திராவிடர் மாணவர் விடுதிக்கு சென்றனர். அங்கு தங்கியிருந்த மாணவர்கள் அனைவரும் வெளியே சென்றிருந்தனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் அங்கு நின்ற சமையல் ஊழியரை தாக்கினர். மேலும் மாணவர்களின் அறைக்குள் இருந்த கட்டில், மேஜைகளை கீழே தள்ளி சேதப்படுத்தி விட்டு கும்பல் தப்பி சென்றது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் திருப்பூர் வடக்கு போலீஸ் உதவி கமி‌ஷனர் அண்ணாத்துரை, இன்ஸ்பெக்டர் ராஜசேகர் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கும்பல் விட்டு சென்ற ஒரு மோட்டார் சைக்கிள், 3 செல்போன்களை போலீசார் கைப்பற்றினர்.

    விடுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியவர்களின் உருவம் கல்லூரி அருகே உள்ள பனியன் கம்பெனியின் கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது. இதை வைத்து தாக்குதல் நடத்தியவர்கள் யார்? என்று விசாரித்தனர்.

    போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கல்லூரியில் படிக்கும் 3 மாணவர்கள் உள்பட 15 பேர் இதில் சம்பந்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×