search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீபா அணி முடங்கியது: ஆதரவாளர்கள் ஏமாற்றம்
    X

    தீபா அணி முடங்கியது: ஆதரவாளர்கள் ஏமாற்றம்

    அ.தி.மு.க. தங்களுக்கே சொந்தம் என்று முழக்கமிட்டு வந்த தீபா அணி கடந்த சில நாட்களாக முடங்கி போய் உள்ளது. இந்த முடக்கத்தால் நிர்வாகிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
    சென்னை:

    ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா அரசியலில் குதித்தார்.

    எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கிய அவர் தி.நகர் சிவஞானம் தெருவில் உள்ள தனது வீட்டிலேயே தலைமை அலுவலகத்தையும் நடத்தி வந்தார். மாவட்டம் வாரியாக நிர்வாகிகளை நியமித்தும் தீபா ஆலோசனை நடத்தினார்.

    சசிகலா-எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு எதிராக கருத்துக்களை கூறி வந்த அவர் அ.தி.மு.க.வை மீட்போம் என்று முழங்கினார். போயஸ் கார்டன் வீடு எங்களுக்கே சொந்தம் அதனை மீட்டெடுப்போம் என்றும் கூறினார். தீபாவுக்கு பக்கபலமாக முன்னணி நிர்வாகிகள் பலர் செயல்பட்டனர். வக்கீல் பசும்பொன் பாண்டியன் தலைமையில் தீபா அணியின் நிர்வாகிகள் டெல்லி சென்றும் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர்.

    தீபா அணி சார்பில் 5½ லட்சம் பிரமாண பத்திரங்களும் தாக்கல் செய்யப்பட்டன. அ.தி.முக. யாருக்கு சொந்தம் என்று முடிவெடுக்கும் போது எங்களையும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டது.

    இப்படி அ.தி.மு.க. தங்களுக்கே சொந்தம் என்று முழக்கமிட்டு வந்த தீபா அணி கடந்த சில நாட்களாக முடங்கி போய் உள்ளது. பிளவுபட்ட அ.தி.மு.க. அணிகள் இணைந்து பொதுக்குழுவை கூட்டி சசிகலாவை நீக்கிவிட்டு நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க. என்று கூறியுள்ளனர். ஆனால் இதுபற்றி தீபா அணி சார்பில் எந்தவித கருத்துக்களும் தெரிவிக்கப்படவில்லை. தீபா அணியின் இந்த முடக்கத்தால் நிர்வாகிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    இது தொடர்பாக தீபா அணி சார்பில் டெல்லியில் சென்று தேர்தல் ஆணையத்தில் முறையிட்ட வக்கீல் பசும்பொன் பாண்டியன் கூறும்போது, தீபா அணியில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த நிர்வாகிகள் அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்று ஆலோசித்து வருகிறோம் என்றார்.

    எனது பெயரில்தான் 5½ லட்சம் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதுபற்றியும் உரிய நேரத்தில் முடிவு எடுப்போம் என்று கூறினார்.

    இதன் மூலம் தீபா அணி விரைவில் இரண்டாக உடையும் என்று தெரிகிறது.

    எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டியது செல்லாது. தேர்தல் ஆணையத்தில் இவர்கள் பிரமாண பத்திரத்தை வாபஸ் வாங்கினாலும், எங்களிடம் கேட்டு விட்டுத்தான் தேர்தல் ஆணையம் முடிவு செய்ய முடியும். அது போன்று செயல்படாவிட்டால் சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×