search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காளையார் கோவிலில் கழுத்தை நெரித்து பெண் கொலை: கணவன் தலைமறைவு
    X

    காளையார் கோவிலில் கழுத்தை நெரித்து பெண் கொலை: கணவன் தலைமறைவு

    காளையார்கோவிலில் கழுத்தை நெரித்து பெண் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் கஸ்தூரிபாய் தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி (வயது 35), கட்டிட தொழிலாளி. இவருக்கும், திருவேகம்புத்தூர் குலமங்கத்தைச் சேர்ந்த மாரிக்கண்ணு (30) என்ற பெண்ணுக்கும் கடந்த 1¼ வருடத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை.

    குடிப்பழக்கம் உள்ள பாலாஜி அடிக்கடி குடித்துவிட்டு மாரிக் கண்ணுவிடம் தகராறு செய்து வந்தார். இதனால் மாரிக்கண்ணு மிகவும் மன வேதனையில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் மாரிக் கண்ணு திருவேகம்புத்தூரில் நடைபெற்ற திருமணத்திற்கு சென்றார். வீடு திரும்பிய போது சில பாத்திரங்களை காணவில்லை. பாத்திரங்கள் எங்கே? என்று கணவரிடம் மாரிக்கண்ணு கேட்டார். அதற்கு அவர் அவற்றை அடகு வைத்து தான் மது குடித்ததாக கூறினார். இதனால் கணவன் -மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் மாரிக் கண்ணுவின் தாயார் தனது மகளுக்கு போன் செய்தார். அவர் எடுக்க வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் மகள் வீட்டுக்கு விரைந்து வந்தார். கதவு வெளியே பூட்டப்பட்டிருந்தது.

    இது குறித்து காளையார் கோவில் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் கல்யாண குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மாரிக்கண்ணு கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

    கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மாரிக்கண்ணுவை, கணவர் கழுத்தை நெரித்துக் கொன்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். தற்போது பாலாஜி தலைமறைவாகி உள்ளார். அவர் பிடிபட்டால் தான் முழு விபரமும் தெரியவரும்.

    இதற்கிடையே பாலாஜியின் தந்தை, தம்பியிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×