search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொடர் மழையால் புழல் ஏரியில் நீர்மட்டம் உயர்வு
    X

    தொடர் மழையால் புழல் ஏரியில் நீர்மட்டம் உயர்வு

    தொடர் மழையால் வறண்டு கிடந்த புழல் ஏரியில் தற்போது தண்ணீர் இருப்பு கிடு, கிடுவென உயர்ந்து வருகிறது.

    செங்குன்றம்:

    தமிழகத்தில் சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தினமும் மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை கொட்டுகிறது.

    இதனால் வறண்டு கிடந்த ஏரி, குளங்களில் நீர்மட்டம் அதிரடியாக உயர்ந்து வருகின்றன. குறிப்பாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் தண்ணீர் இருப்பு அதிகரித்து உள்ளது.

    பருவமழை பொய்த்ததால் புழல் ஏரி கடந்த மாதமே வறண்டு மணல் மேடாக காட்சி அளித்தது. தற்போது பெய்து வரும் தொடர்மழை காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இதனால் வறண்டு கிடந்த புழல் ஏரியில் தற்போது தண்ணீர் இருப்பு கிடு, கிடுவென உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி ஏரியில் 23 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. (மொத்த கொள்ளளவு 3,300 மி.கன அடி) 75 கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியிலும் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி ஏரியில் 123 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. (மொத்த கொள்ளளவு 3645 மி.கனஅடி) 130 கன அடி தண்ணீர் வருகிறது.

    மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்து இருப்பதால் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு 14 கன அடியாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. சென்னை மெட்ரோ வாட்டருக்கு 3 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. இதுவரை ஒரு கனஅடி தண்ணீர் மட்டும் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    செம்பரம்பாக்கம் ஏரியில் கடந்த வாரம் 13-ந்தேதி 80 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது. தொடர் மழை காரணமாக ஒரு வாரத்தில் ஏரியில் 43 மில்லியன் கனஅடி நீர் அதிகரித்து உள்ளது.

    பூண்டி ஏரியில் 21 மி.கனஅடி நீர் இருக்கிறது. (மொத்த கொள்ளளவு 3231 மி.கனஅடி) ஏரிக்கு 13 கனஅடி தண்ணீர் வருகிறது. சோழவரம் ஏரி இன்னும் வறண்டே கிடக்கிறது. அங்கு தண்ணீர் வரத்து இல்லை

    தொடர் மழையால் மற்ற ஏரிகளில் நீர்மட்டம் அதிகரித்து வரும் நிலையில் சோழவரம் ஏரிக்கு நீர் வரத்து இல்லாதது பொது மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏரியில் 881 மி.கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

    Next Story
    ×