search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக்காணி அருகே மரத்தில் கார் மோதி முஸ்லிம் மதகுரு பலி: மனைவி படுகாயம்
    X

    முக்காணி அருகே மரத்தில் கார் மோதி முஸ்லிம் மதகுரு பலி: மனைவி படுகாயம்

    முக்காணி அருகே கார் மரத்தில் மோதி முஸ்லிம் மதகுரு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடிய அவரது மனைவியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டனர்.

    ஆறுமுகநேரி:

    கோவை மாவட்டம் காரமடையை சேர்ந்தவர் அம்ஜத் உசேன் (வயது 60). அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளிவாசலில் இமாம் ஆக இருந்தார். இவரது மனைவி நூஷ்கா மைமூன் (55). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இவர்களது உறவினரான தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி சீருடையார்புரத்தை சேர்ந்த ஒருவர் நேற்று இறந்து விட்டார்.

    அவரது இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக அம்ஜத் உசேன் தனது மனைவியுடன் நேற்று இரவு காரமடையில் இருந்து காரில் புறப்பட்டார். அவரது உறவினரான அபூபக்கர் சித்திக் என்பவர் காரை ஓட்டி சென்றார்.

    இன்று அதிகாலையில் தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் முக்காணி அருந்ததியர் காலனி அருகே வந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கார் நிலை தடுமாறி சாலையோர அரச மரத்தில் மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரின் முன்பக்க சீட்டில் இருந்த அம்ஜத் உசேன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

    இடிபாடுகளுக்குள் கால்கள் இரண்டும் சிக்கி உயிருக்கு போராடிய அவரது மனைவி நூஷ்கா மைமூனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டனர். டிரைவர் அபூபக்கர் சித்திக்கும் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர்கள் இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அம்ஜத் உசேனின் உடலும் பிரேத பரிசோதனைக்காக அங்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்து குறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×