search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொதட்டூர்பேட்டையில் அரசு பஸ்சை சிறைபிடித்து கல்லூரி மாணவர்கள் மறியல் - 100 பேர் கைது
    X

    பொதட்டூர்பேட்டையில் அரசு பஸ்சை சிறைபிடித்து கல்லூரி மாணவர்கள் மறியல் - 100 பேர் கைது

    பொதட்டூர்பேட்டையில் கூடுதல் பஸ் இயக்க கோரி அரசு பஸ்சை சிறைபிடித்ததால், 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
    பள்ளிப்பட்டு:

    பள்ளிப்பட்டை அடுத்த பொதட்டூர்பேட்டை பஸ் நிலையத்தில் இருந்து திருத்தணிக்கு தினமும் அதிகாலை 3.50 மணிக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. இதில் சென்னைக்கு செல்லும் கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் ஊழியர்கள் அதிக அளவு பயணம் செய்கின்றனர்.

    அதிகாலை 3.50 மணிக்கு புறப்படும் பஸ்சுக்கு பின்னர் காலை 4.30 மணிக்கே அடுத்த பஸ் செல்கிறது. இதனால் 3.50 மணிக்கு செல்லும் பஸ்சில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    மேலும் இந்த பஸ்சை அதிகாலை 3.30 மணிக்கு எடுக்க வேண்டும். திருத்தணிக்கு கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் இன்று அதிகாலை பொதட்டூர் பஸ் நிலையத்துக்கு வந்த கல்லூரி மாணவர்கள் கூடுதல் பஸ் இயக்க கோரியும், முதலில் புறப்படும் பஸ்சை அதிகாலை 3.30 மணிக்கு இயக்க வலியுறுத்தியும் திடீரென திருத்தணி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அப்பகுதி மக்களும் மறியலில் கலந்து கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    டி.எஸ்.பி. பாலச்சந்திரன், வட்டாட்சியர் தமிழ்ச் செல்வி மற்றும் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மாவட்ட கலெக்டர் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று கூறி கல்லூரி மாணவர்களும், கிராம மக்களும் மறியலை கைவிட மறுத்துவிட்டனர்.

    இதனால் அதிகாலையில் தொடங்கிய மறியல் போராட்டம் காலை 10 மணி வரை நீடித்தது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 100 பேரை போலீசார் கைதுசெய்தனர்.
    Next Story
    ×