search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் குடிநீர் கேட்டு 3 இடங்களில் மறியல்
    X

    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் குடிநீர் கேட்டு 3 இடங்களில் மறியல்

    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் குடிநீர் கேட்டு பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    செங்கம்:

    செங்கம் அடுத்த காரபட்டு ஊராட்சி, பானு நகரில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதிக்கு, கடந்த 3-மாதங்களாக சரிவர குடிநீர் வழங்கவில்லை. இது குறித்து அப்பகுதி மக்கள் காரபட்டு ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை குடிநீர் வழங்க கோரி கோரிக்கை மனு கொடுத்தனர். ஆனால், ஊராட்சி நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால், ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் செங்கம்-போளூர் சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுப்பாளையம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, போலீசார் காரபட்டு ஊராட்சி நிர்வாகத்திடம் பேசி உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

    இதையடுத்து அப்பகுதி மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கலசபாக்கம் அடுத்த கேட்டவரம்பாளையம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. இங்கு கடந்த ஒரு மாதமாக சரிவர குடிநீர் வரவில்லை.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கேட்டவரம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தனர். ஆனால் ஊராட்சி நிர்வாகம் இது குறித்து எதுவும் கண்டு கொள்ளவில்லை.

    இதனால் ஆவேசம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் கலசப்பாக்கம்-மேல் சோழகுப்பம் சாலையில் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கலசபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியமூர்த்தி, மற்றும் கடலாடி போலீசார் சம்வவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியமூர்த்தி உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    ஆரணி அடுத்த சித்தேரி சிவசக்தி நகரில் கடந்த 4 மாதங்களாக குடிநீர் வினியோகம் சீராக வழங்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை ஆரணி-சேத்துப்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    அதிகாரிகள் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×