search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று ஊட்டி வருகை
    X

    ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று ஊட்டி வருகை

    ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வருகையை யொட்டி ஊட்டியில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் தரையிறங்கும் தீட்டுக்கல் பகுதியில் 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
    கோவை:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி லவ்டேல் பகுதியில் லாரன்ஸ் பள்ளி உள்ளது.

    மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த பள்ளியின் 159-வது ஆண்டு விழா இன்று பிற்பகல் நடக்கிறது.

    விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொள்கிறார். இதற்காக பிரணாப் முகர்ஜி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதியம் 12.20 மணிக்கு கோவை விமான நிலையம் வருகிறார். அங்கு அவரை தமிழக கவர்னர்(பொறுப்பு) வித்யாசாகர் ராவ், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் முக்கிய அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்கின்றனர்.

    பின்னர் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி தீட்டுக்கல் பகுதிக்கு செல்கிறார். அங்கு அவரை நீலகிரி கலெக்டர் சங்கர் பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார். இதையடுத்து பள்ளி விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

    விழா முடிந்ததும் ஹெலிகாப்டர் மூலம் கோவை விமான நிலையம் திரும்பும் அவர் மாலை 5 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார். முன்னதாக, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று இரவு ஊட்டி ராஜ் பவனில் தங்குவதாக கூறப்பட்டிருந்தது. நாளை(புதன் கிழமை) ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு சென்று மலர் கண்காட்சியை பார்வை விட்டு மதியம் அவர் டெல்லி திரும்புவதாக பயணதிட்டம் இருந்தது. ஆனால் இந்த திட்டத்தில் மாற்றம் செய்யப் பட்டு இன்று மாலையே அவர் டெல்லி திரும்புவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஜனாதிபதி வருகையை யொட்டி ஊட்டியில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் தரையிறங்கும் தீட்டுக்கல் பகுதியில் 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    வானிலை காரணமாக திடீரென ஹெலிகாப்டர் இயக்க முடியாத நிலை ஏற்பட்டால் கோவையில் இருந்து கார் மூலம் ஊட்டி செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக குண்டு துளைக்காத கார் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் கோவையில் இருந்து ஊட்டி செல்லும் பாதையில் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×