search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    எண்ணெயில் பொரித்த உணவை நியூஸ் பேப்பரில் வைத்து சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்து
    X

    எண்ணெயில் பொரித்த உணவை நியூஸ் பேப்பரில் வைத்து சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்து

    வடை, பஜ்ஜி போன்ற எண்ணெய் பலகாரங்களில் உள்ள எண்ணெயை வெளியேற்ற செய்தித்தாள்களை பயன்படுத்துகிறார்கள். இதனால் உடலுக்கு ஏற்படும் பாதிப்பை பார்க்கலாம்.
    செய்தித்தாள் என்ற தமிழ் வார்த்தையை விட ஆங்கில வார்த்தையான ‘நியூஸ் பேப்பர்‘ என்பதைத்தான் நாம் பேச்சு வழக்கில் அதிகம் பயன்படுத்துகிறோம். செய்தித்தாள்கள், செய்தி படிப்பதற்கு என்ற நிலையைக் கடந்து பல பயன்பாடுகளுக்கு உபயோகமாகிறது என்பது மகிழ்ச்சியான விஷயமே!

    ஆனால் அதிலும் சிலவகை பயன்பாடுகளில் ஆபத்து இருக்கிறது என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள். அதில் ஒன்றுதான் செய்தித்தாளில் கை துடைப்பது. சிறிய ஓட்டல்கள், தெருவோர உணவகங்களில் சாப்பிட்டு கைகழுவிய பின், ஈரமான கைகளை துடைப்பதற்கு பழைய செய்தித்தாள்களை கத்தரித்து வைத்திருப்பார்கள். அவற்றில் நம் கையை துடைக்கும் போது, நமது உடலுக்குள் காரீயம் சென்றுவிடுகிறது. செய்தித்தாளின் அச்சு மையில் காரீயம் உள்ளது.

    அது உலர்வாக இருக்கும்வரை எந்த பிரச்சினையும் இல்லை. தண்ணீர் பட்டால், பிரச்சினைதான். இது கூட பரவாயில்லை. பலரும் வடை, பஜ்ஜி போன்ற எண்ணெய் பலகாரங்களில் உள்ள எண்ணெயை வெளியேற்ற செய்தித்தாள்களை பயன்படுத்துகிறார்கள். இது அதைவிட மிகப் பெரிய ஆபத்து. காரீயம் நேரடியாக உணவுக் குழாய்க்குள் சென்று விடும். .காரீயம் உடலுக்குள் சென்றால் அது சிறுநீரகம், கல்லீரல், எலும்பு வளர்ச்சி, தசை வளர்ச்சி என்று எல்லாவற்றையும் பாதிக்கும்.



    இப்படி கெடுதல் விளைவிக்கும் சில பொருட்கள் உடலுக்குள் சென்றால், காலப்போக்கில் அது கழிவாக வெளியே வந்துவிடும். ஆனால் காரீயத்தின் கதை வேறு. அது கழிவாக வெளியே செல்வதில்லை. தொடர்ந்து காரீயம் உள்ளே போகப் போக சேர்ந்து கொண்டே போகும். கெடுதல்கள் கூடிக்கொண்டே போகும். நிறைய பேர் காரீயம் என்றால் அது ஈயம், அலுமினியம் என்று நினைக்கிறார்கள். அது தவறு. காரீயம் வேறு, ஈயமும் அலுமினியமும் நமக்கு கெடுதல் தராத உலோகங்கள்.

    எவர்சில்வர் பாத்திரங்கள் வருவதற்கு முன்பு நமது சமையல் அறைகளை ஆட்சி செய்தவை, ஈயம் பூசப்பட்ட பித்தளைப் பாத்திரங்களும், அலுமினியப் பாத்திரங்களும்தான். அதனால் அவை கெடுதல் இல்லை. காரீயம் தான் கெடுதல். முன்பெல்லாம் பெட்ரோலில் கூட காரீயம் இருந்தது. அது வாகனப்புகை மூலம் காற்றின் வழியாக மனித நுரையீரலுக்குள் தஞ்சம் அடைந்தது.

    இப்போது பெட்ரோலில் காரீயம் நீக்கப்பட்டு விட்டது. சில உலோகங்கள் ஓரளவுக்கு உடலில் இருக்கலாம் அது கெடுதல் தராது என்பார்கள். ஆனால் காரீயம் சிறிதளவு உடலுக்குள் சென்றால் கூட கெடுதல்தான்.
    Next Story
    ×