search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பொது இடத்தில் கடைபிடிக்க வேண்டிய மேஜை நாகரிகம்
    X

    பொது இடத்தில் கடைபிடிக்க வேண்டிய மேஜை நாகரிகம்

    பொது இடத்தில், பொதுவான நண்பர்கள் அல்லது புதியவர்களுடன் இணைந்து சாப்பிடும் போது இந்த மேஜை நாகரிகத்தை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
    நண்பர்கள் மற்றும் விருந்தினர்களுடன் மேஜையில் அமர்ந்து சாப்பிடும் போது சில வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இதை ஆங்கிலேயர்கள் ‘மேஜை நாகரிகம்’ (டேபிள் மேனர்ஸ்) என்பார்கள். நமது வீட்டில் சாப்பிடும் போது எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம். ஆனால் பொது இடத்தில், பொதுவான நண்பர்கள் அல்லது புதியவர்களுடன் இணைந்து சாப்பிடும் போது இந்த மேஜை நாகரிகத்தை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். அந்த மேஜை நாகரிகங்கள் வருமாறு:-

    * சாப்பாட்டு மேஜையில் அமர்ந்த உடன் உணவு பரிமாறப்படுவது வழக்கம். உங்கள் தட்டில் உணவு பரிமாறப்பட்ட உடன் சாப்பிடத்தொடங்கக்கூடாது. உங்களுடன் அமர்ந்துள்ள அனைவரின் தட்டிலும் உணவு பரிமாறப்பட்ட பின்னர் தான் சாப்பிடத்தொடங்கவேண்டும்.

    * சாப்பிடும் போது சத்தம் ஏற்படாத வகையில் வாயை மூடிக்கொண்டு சாப்பிட வேண்டும். சாப்பிடும் போது அவசர அவசரமாக சாப்பிடக்கூடாது. மெதுவாக சாப்பிட வேண்டும்.

    * உணவுத்துகள்கள் உங்கள் முகம் அல்லது உடலில் சிந்தும்படி சாப்பிடக்கூடாது. ஒருவேளை உணவுத்துகள் உதடு அல்லது முகத்தில் பட்டுவிட்டால் அதை நாசுக்காக துடைக்கவேண்டும்.



    * சாப்பிடும் போது மேஜையில் ‘நாப்கின்’ எனப்படும் துண்டுத்துணி மற்றும் கத்தி, கரண்டி, முள்கரண்டி (ஸ்பூன், போர்க், நைப்) போன்றவை வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும். இவற்றை பயன்படுத்த நீங்கள் கையில் எடுத்துவிட்டால் பின்னர் அதை உங்கள் தட்டில்தான் வைக்க வேண்டுமே தவிர மீண்டும் மேஜையில் வைக்க கூடாது. மேலும் இந்த பொருட்களை கையில் உயர்த்தி பிடித்தபடி உணவு பரிமாறுபவரை அழைக்கக் கூடாது.

    * சாப்பாட்டு மேஜைக்கு நெருக்கமாக உங்கள் இருக்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். அப்போது உங்கள் உடம்பு நேராக இருக்க வேண்டும். உடம்பை வளைத்துக் கொண்டோ, மேஜை மீது குனிந்துகொண்டோ சாப்பிடக் கூடாது.

    * விருந்தினர்களுடன் அமர்ந்து சாப்பிடும் போது சாப்பாட்டின் தரம் மற்றும் சுவை குறித்து விமர்சனம் செய்யக்கூடாது. உங்களுக்கு உணவு பிடிக்கவில்லை என்றால் குறைவாக சாப்பிடவேண்டுமே தவிர அனைவர் முன்பும் உணவின் தரம், சுவையை குறைகூறக்கூடாது.

    * உங்களால் எவ்வளவு சாப்பிட முடியுமோ அந்த அளவு உணவை மட்டுமே தட்டில் எடுக்க வேண்டும். அதிகமாக உணவை எடுத்த பின்னர் அதை சாப்பிடாமல் மிச்சம் வைத்து அந்த உணவை வீணாக்க கூடாது. மேலும் கரண்டி மூலம் அந்த உணவை எடுத்து சாப்பிடும் போதும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்தே சாப்பிடவேண்டும். அதிக உணவை எடுத்து வாயில் திணிக்கக்கூடாது.



    * சாப்பிடும் போது தும்மல் அல்லது இருமல் அல்லது ஏப்பம் வந்தால் அதிக சத்தம் இன்றி அதை வெளிப்படுத்த வேண்டும். அப்போது உங்களிடம் உள்ள நாப்கின் மூலம் உங்கள் வாய் மற்றும் முகத்தை மறைத்துக்கொள்வது நல்லது. மேலும் அப்போது விருந்தினர்களிடம் ‘மன்னிக்கவும்’ (எக்ஸ்கியூஸ் மீ) என்று சொல்வது நாகரிகம்.

    * கத்தியை பயன்படுத்தி பழங்கள் மற்றும் உணவுப் பண்டங்களை உங்களால் சாப்பிடும் அளவுக்கு சிறிய துண்டுகளாக வெட்டி அதன்பின்னர் முள்கரண்டி அல்லது கரண்டி மூலம் எடுத்து சாப்பிட வேண்டும். அப்படியே பெரிய துண்டாக எடுத்து வாய்க்குள் திணிக்க கூடாது.

    * சாப்பிடும் போது உங்கள் பொருள் (கைப்பை, மொபைல் போன்) எதையும் சாப்பாட்டு மேஜையில் வைக்க வேண்டாம்.

    * மேலை நாட்டுப்பாணியில் அமைந்துள்ள உணவுவிடுதிகளில் கத்தி, கரண்டி போன்றவற்றை பயன்படுத்தி சாப்பிடுவது மரபு. இந்த கத்தி, கரண்டி போன்ற பொருட்களை பயன்படுத்தி எவ்வாறு சாப்பிடுவது என்பதை முன்கூட்டியே அறிந்து கொண்டு, கற்றுக்கொண்டு விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது நல்லது.
    Next Story
    ×