search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    24 நட்சத்திர அபிஷேகமும்.. உயர்வுபெறும் வாழ்க்கையும்..
    X

    24 நட்சத்திர அபிஷேகமும்.. உயர்வுபெறும் வாழ்க்கையும்..

    கோவிலின் திருக்குளத்தில் அல்லது புண்ணிய தீர்த்தங்களில் இருந்து எடுத்து வரப்படும் புனித நீரால் நிகழ்த்தப்படும் கிரியை ‘அபிஷேகம்’ ஆகும்.
    ஆலயங்களின் கர்ப்பக்கிரகத்தில் உள்ள தெய்வ திருமேனிகளுக்கும், உற்சவ மூர்த்திகளுக்கும், தினம்தோறும் அல்லது வாரம் ஒரு முறை அந்தந்த கோவில்களில் கடைப் பிடிக்கப்படும் ஆகமம், நித்தியம், நைமித்திகம் மற்றும் விசேஷ பூஜை விதிகளுக்கு உட்பட்டு அபிஷேகம் செய்யப்படும். ‘அபிஷேகம்’ என்றால் ‘ஈரமாக்குவது’ என்று பொருள்.

    அதாவது கோவிலின் திருக்குளத்தில் அல்லது புண்ணிய தீர்த்தங்களில் இருந்து எடுத்து வரப்படும் புனித நீரால் நிகழ்த்தப்படும் கிரியை ‘அபிஷேகம்’ ஆகும். சந்தனம், விபூதி மற்றும் கலச அபிஷேகம் ஆகியவை தவிர, மற்ற அபிஷேகங்களை பார்க்கக்கூடாது என்பது ஆகம விதி. அதனால் திரை போடப்பட்டு அபிஷேக கிரியை நடத்தப்படுகிறது.

    குறிப்பாக ஒருவர் பிறந்த ஜென்ம ராசியில் இடம் பெற்றிருக்கும் அவரது ஜென்ம நட்சத்திரம் என்பது அவரது உயிர்த்தன்மையை விளக்குவதோடு, இப்பூவுலகில் அவருக்கு எத்தகைய வாழ்க்கை சூழல் ஏற்படும் என்பதை அறிவதற்கான, மையப் புள்ளியாகவும் விளங்குகிறது. ஜென்ம நட்சத்திரத்தை அடிப்படையாக வைத்துத்தான், ஒருவரது வாழ்வியல் கணக்கான திசாபுத்திகள் தொடங்குகின்றன. ஒருவரது ஜென்ம நட்சத்திரம் என்பது என்றும் மாறாதது.

    மேலும், அதற்குரிய அபிஷேகங்களை செய்வதன் மூலம் வாழ்க்கையில் ஆன்மிக நலன்கள் வந்து சேருவதாக நம்பிக்கை உண்டு. அத்தகைய நட்சத்திர அபிஷேகம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். கீழே குறிப்பிட்ட தெய்வ மூர்த்தங்களுக்கு அபிஷேகம் செய்ய இயலாத பட்சத்தில், தங்களது குலதெய்வங்களுக்கு அதை செய்வதன் மூலம் பலன் பெறலாம்.

    அஸ்வினி

    முதலாவது நட்சத்திரமான அஸ்வினிக்கு உரியது சந்தன எண்ணெய் அபிஷேகம் ஆகும். அஸ்வினியில் பிறந்தவர்கள் சரஸ்வதி தேவிக்கு அஸ்வினி நட்சத்திரம் வரும் நாளில் அபிஷேகம் செய்து வளம் பெறலாம்.

    பரணி :

    இரண்டாவது நட்சத்திரமான பரணிக்குரிய அபிஷேகமானது பச்சரிசி மாவினால் செய்யப்படுவதாகும். பரணியில் பிறந்தவர்கள், பரணி நட்சத்திரம் வரும் நாளன்று அதிகாலையில் பச்சரிசி மாவினால் துர்க்கைக்கு அபிஷேகம் செய்வது விசேஷமாகும்.

    கார்த்திகை

    மூன்றாவது நட்சத்திரமான கார்த்திகையில் பிறந்தவர்கள் நெல்லிக்காய் பொடி அபிஷேகம் செய்வது நல்லது. தங்கள் பிறப்பு நட்சத்திர அதிதேவதையான அக்னியின் அம்சமாக உள்ள அக்னீஸ்வரருக்கு கார்த்திகை நட்சத்திரத்தன்று அபிஷேகம் செய்வது நல்லது.

    ரோகிணி

    நான்காவது நட்சத்திரமாக இருக்கும் ரோகிணியில் பிறந்தவர்களுக்கு உகந்தது மஞ்சள்பொடி அபிஷேகமாகும். பிரம்மாவுக்கு ரோகிணி நட்சத்திரம் வரும் நாளில் அபிஷேகம் செய்யலாம்.

    மிருகசீரிஷம்

    மிருகசீரிஷம் எனப்படும் ஐந்தாவது நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாசானாதி திரவியங்கள் கலந்த மஞ்சள் பொடியால் அபிஷேகம் செய்யவேண்டும். அவர்கள் சோமன் எனப்படும் சந்திரனுக்கு மிருக சீரிஷ நட்சத்திரத்தன்று அபிஷேகம் செய்ய வேண்டும்.

    திருவாதிரை

    ஆறாவது நட்சத்திரமான திருவாதிரையில் பிறந்தவர்கள் தங்கள் ஜென்ம நட்சத்திரம் வரக்கூடிய நாளன்று அதிகாலையில் சிவ லிங்கத்துக்கு ‘பஞ்சகவ்யம்’ கொண்டு அபிஷேகம் செய்வது சிறப்பானது.

    புனர்பூசம்

    ஏழாவது நட்சத்திரமான புனர்பூசத்தில் பிறந்தவர்கள் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வது மிகவும் உகந்தது. தங்களது ஜென்ம நட்சத்திரத்தன்று ஸ்ரீராமருடைய திருமேனிக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யலாம்.

    பூசம்

    எட்டாவதாக இருக்கும் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது ஜென்ம நட்சத்திரத்தன்று பசும்பால் அல்லது பலாமிர்தம் (மா, பலா, வாழை ஆகியவற்றை கலந்து செய்தது) ஆகியவற்றால் குரு பகவானுக்கு அபிஷேகம் செய்யலாம்.

    ஆயில்யம்

    ஒன்பதாவது நட்சத்திரமான ஆயில்யத்தில் பிறந்தவர்களுக்கு பசும்பால் அபிஷேகம் உகந்தது. அவர்கள் ஆயில்யம் வரக்கூடிய நாளன்று ஆதிசேஷன் அல்லது நாகம்மன் ஆகிய தெய்வங்களுக்கு பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்யலாம்.

    மகம்

    பத்தாவது நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பசு நெய் அபிஷேகம் உகந்தது. தங்களது வீட்டில் தயார் செய்த பசு நெய் கொண்டு வெள்ளிக் கிழமைகளில் சூரிய நாராயணனுக்கு அபிஷேகம் செய்யலாம்.



    பூரம்

    பதினொன்றாவதாக இருக்கும் பூரத்தை ஜென்ம நட்சத்திரமாக கொண்டவர்கள், பூரம் வரக்கூடிய நாளன்று வீட்டில் தயாரிக்கப்பட்ட பசும் தயிர் கொண்டு அன்னை பார்வதிக்கு அபிஷேகம் செய்யலாம்.

    உத்திரம்

    உத்திரம் நட்சத்திரம் பனிரெண்டாவதாக வரக்கூடியதாகும். அதை ஜென்ம நட்சத்திரமாக உடையவர்கள் ஸ்ரீமகாலட் சுமிக்கு, பூரம் நாளன்று தேன் மற்றும் கல்கண்டு கொண்டு அபிஷேகம் செய்வது சிறப்பாகும்.

    ஹஸ்தம்

    பதிமூன்றாவதாக வரும் ஹஸ்தம் நட்சத்திரத்தை தங்களது ஜென்ம நட்சத்திரமாக கொண்டவர்கள் தேன் கொண்டு, ஸ்ரீகாயத்ரி தேவிக்கு ஹஸ்தம் வரக்கூடிய நாளில் அபிஷேகம் செய்தால் சகல நன்மைகளும் வந்து சேரும்.

    சித்திரை

    பதினான்காவதாக இருக்கும் சித்திரையை தங்கள் ஜென்ம நட்சத்திரமாக கொண்டவர்கள், சித்திரை நட்சத்திர நாளில் ஸ்ரீசக்கரத்தாழ்வாருக்கு கரும்பு சாறு கொண்டு அபிஷேகம் செய்வது விசேஷமாகும்.

    ஸ்வாதி

    பதினைந்தாவதாக வரக்கூடிய ஸ்வாதி நட்சத்திரத்தை தங்கள் பிறப்பு நட்சத்திரமாக கொண்டவர்கள் ஸ்வாதி வரக்கூடிய நாளன்று எலுமிச்சம்பழ சாறு அல்லது பல்வேறு பழங்களின் சாறு கொண்டு நரசிம்ம மூர்த்திக்கு அபிஷேகம் செய்ய உகந்தது.

    விசாகம்

    பதினாறாவதாக வரக்கூடிய விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உகந்ததாக நெய் கலந்த சுத்தான்ன அபிஷேகம் விளங்குகிறது. விசாகம் வரும் நாளில் முருகப்பெருமானுக்கு அதை செய்வது விசேஷமாகும்.

    அனுஷம்

    பதினேழாவதாக இருக்கும் அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இளநீர் அபிஷேகம் செய்வது நல்ல பலன்களை தரக்கூடியது. அதை அனுஷம் வரக்கூடிய நாளில் ஸ்ரீலட்சுமி நாராயணருக்கு செய்யலாம்.

    கேட்டை

    கேட்டை நட்சத்திரமானது பதினெட்டாவது நட்சத்திரம் ஆகும். அதை ஜென்ம நட்சத்திரமாக கொண்டவர்கள் பசும் சாண விபூதி கொண்டு, கேட்டை நட்சத்திர நாளில் இந்திர லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து வளம் பெறலாம்.

    மூலம்

    பத்தொன்பதாவதாக இருக்கும் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆஞ்ச நேயருக்கு சந்தன அபிஷேகம் செய்வது விசேஷமானது. அதை ஒரு மூல நட்சத்திர நாளில் செய்தால் பல நன்மைகளை பெறலாம்.

    பூராடம்

    இருபதாவது நட்சத்திரமாக இருக்கும் பூராடம், தங்களது பிறப்பு நட்சத்திரமாக உடையவர்கள் ஸ்ரீஜம்புகேஸ்வரருக்கு பூராடம் வரக்கூடிய நாளில் பசும்பால் அபிஷேகத்தோடு, வில்வ தளம் கொண்டு அர்ச்சனை செய் வதும் விசேஷம்.

    உத்திராடம்

    இருபத்தொன்றாவது நட்சத்திரமாக விளங்கும் உத்திராடத்தை தங்கள் ஜென்ம நட்சத்திரமாக கொண்டவர்கள், உத்திராடம் வரக்கூடிய நாளன்று சிவ பெருமானுக்கு ‘தாராபிஷேகம்’ (ஒரு செம்பு பாத்திரத்திலிருந்து லிங்கத்தின் மீது சொட்டுசொட்டாக தீர்த்தம் விழுவது..) செய்து வில்வ தளம் கொண்டு அர்ச்சனையும் செய்யவேண்டும்.

    திருவோணம்

    இருபத்துரெண்டாம் நட்சத்திரமான திருவோணம் தங்களது பிறப்பு நட்சத்திரமாக கொண்டவர்கள், திருவோண நாளில் மஹாவிஷ்ணுவுக்கு, செம்பு பாத்திரத்தில் வைக்கப்பட்ட நீரால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

    அவிட்டம்

    இருபத்துமூன்றாவது நட்சத்திரமானது அவிட்டம் ஆகும். அதில் பிறந்தவர்கள் அவிட்டம் வரக்கூடிய நாளில் ஸ்ரீஅனந்த சயன பெருமாளுக்கு சங்காபிஷேகம் செய்வதன் வாயிலாக பல நன்மைகளை பெற்று மகிழலாம்.

    சதயம்

    சதயம் நட்சத்திரம் இருபத்து நான்காவதாக உள்ளது. அதை தங்கள் ஜென்ம நட்சத்திரமாக உடையவர்கள் ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரருக்கு பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்தால் வளமான வாழ்வு ஏற்படும்.

    பூரட்டாதி

    இருபத்து ஐந்தாவது நட்சத்திரமாக இருக்கும் பூரட்டாதியை தங்களது பிறப்பு நட்சத்திரமாக கொண்டவர்கள், பூரட்டாதி வரக்கூடிய நாளன்று தங்க பாத்திரத்தில் வைக்கப்பட்ட தண்ணீரால் குபேர ஈஸ்வரருக்கு அபிஷேகம் செய்வது சிறப்பானதாகும்.

    உத்திரட்டாதி

    உத்திரட்டாதி நட்சத்திரமானது இருபத்து ஆறாவதாக வரக்கூடியது. அதை ஜென்ம நட்சத்திரமாக உடையவர்கள் உத்திரட்டாதியன்று, சிவபெருமானுக்கு வெள்ளி பாத்திரத்தில் வைக்கப்பட்ட தண்ணீரால் அபிஷேகம் செய்வது விசேஷ மாகும்.

    ரேவதி

    இருபத்து ஏழாவது நட்சத்திரமாக விளங்கும் ரேவதியை தங்கள் பிறப்பு நட்சத்திரமாக உடையவர்களுக்கு உகந்தது ‘ஸ்நபனம்’ எனப்படும் ஐவகை தீர்த்த அபிஷேகமாகும். ரேவதி நட்சத்திர நாளில் சனீஸ்வரருக்கு அதை செய்வது நல்லது.

    Next Story
    ×