search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய சின்னக்குமாரருக்கு தீபாராதனை காட்டப்பட்ட போது எடுத்த படம்.
    X
    தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய சின்னக்குமாரருக்கு தீபாராதனை காட்டப்பட்ட போது எடுத்த படம்.

    பழனி முருகன் கோவிலில் ஆனி மாத விழா

    முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் ஆனி மாத கார்த்திகை விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்த கொண்டனர்.
    முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் ஆனி மாத கார்த்திகை விழா நேற்று கொண்டாடப்பட்டது. முன்னதாக அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பும், உடன் விஸ்வரூப தரிசனமும் நடைபெற்றது. காலை 6.30 மணிக்கு விளா பூஜையும், பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையும் நடைபெற்றது. அப்போது முருகப்பெருமானுக்கு வைதீகர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதனை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    பின்னர் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் மூலவரான தண்டாயுதபாணி சுவாமிக்கு 16 வகை அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளிய மூலவருக்கு சிறப்பு பூஜையும், 16 வகை தீபாராதனையும், 16 வகை உபசாரங்களும் நடைபெற்று மகா தீபாராதனை காட்டப்பட்டது. மாலை 6 மணிக்கு தெற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.



    அதையடுத்து உட்பிரகாரத்தில் தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 7.15 மணிக்கு தங்கரதத்தில், சின்னக்குமாரர் எழுந்தருளி வெளிப்பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக 55 பக்தர்கள் தலா ரூ.2 ஆயிரம் செலுத்தி தங்கரத புறப்பாட்டில் கலந்துகொண்டனர்.

    இரவு 9 மணிக்கு மேல் ராக்கால பூஜையில் தண்டாயுதபாணி சுவாமிக்கு வெள்ளைநிற மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்தது. விழா ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா மற்றும் கோவில் அலுவலர்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×