

சென்னை:
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், அதனை கட்டுப்படுத்த மத்திய- மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு மக்கள் நடமாட்டம் முடக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா நிவாரண நிதிக்கு தமிழக அரசு ரூ.3,280 கோடி ஒதுக்கீடு செய்து பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு அவசர கடிதம் அனுப்பி உள்ளார். அதில், கோரோனா வைரஸ் தடுப்புக்காக நாடு தழுவிய ஊரடங்கை தமிழக அரசு, தீவிரமாக பின்பற்றுவதாக கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.9000 கோடி நிதி தேவைப்படுகிறது என்றும், மத்திய அரசு அந்த நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், கொரோனாவால் பாதிக்கப்படும் மக்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்த மத்திய அரசுக்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.