search icon
என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    சருமத்தை பளபளப்பாக்கும் `ஃபேஸ் மாஸ்க்
    X

    சருமத்தை பளபளப்பாக்கும் `ஃபேஸ் மாஸ்க்'

    • பாதாம் எண்ணெய் சருமத்திற்கு பிரகாசம் சேர்க்கும்.
    • தேன் சருமத்திற்கு ஈரப்பதமூட்டும் பண்புகளை கொண்டது.

    குளிர்காலத்தில் சூழ்ந்திருக்கும் பனியின் ஆதிக்கம் சருமத்தை எளிதில் வறண்டுபோகச் செய்துவிடும். சருமத்தின் இயற்கையான ஈரப்பதத்தை அபகரித்து சருமத்தை உலர்வாகவும், மந்தமாகவும் மாற்றிவிடும். ஒரு சில ஃபேஸ் மாஸ்க்குகளை உபயோகித்து சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் மிளிரச் செய்யலாம். அத்தகைய ஃபேஸ் மாஸ்க்குகள் உங்கள் பார்வைக்கு...

    வாழைப்பழம் - பாதாம் எண்ணெய்:

    பழுத்த வாழைப்பழத்தை நன்றாக மசித்து அதனுடன் ஒரு டீஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து பிசைய வேண்டும். இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் உலர விட்டு பின்பு கழுவி விடலாம். வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின்களும், ஈரப்பதமும் சருமத்திற்கு பாதுகாப்பு கவசமாக அமையும். பாதாம் எண்ணெய் சருமத்திற்கு பிரகாசம் சேர்க்கும். குளிர்காலத்தில் ஏற்படும் மந்த நிலையை போக்கி சருமத்திற்கு புத்துணர்ச்சியூட்ட இந்த மாஸ்க் சிறந்த தேர்வாக அமையும்.

    தேன் - தயிர் மாஸ்க்:

    தேன் சருமத்திற்கு ஈரப்பதமூட்டும் பண்புகளைச் கொண்டது. தயிர் சருமத்தை மென்மையாக்கும். புத்துணர்ச்சியையும் அளிக்கும். இரண்டு டேபிள் ஸ்பூன் தயிருடன் ஒரு டேபிள் ஸ்பூன் தேனை கலந்து முகத்தில் பூசி மசாஜ் செய்ய வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவினால் போதும். சருமம் பொலிவுடன் மிளிரத் தொடங்கும்.

    ஓட்ஸ் - பால்:

    இரண்டு டேபிள் ஸ்பூன் ஓட்சை மிக்சியில் அரைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் தேவையான அளவு பால் கலந்து முகத்தில் வட்ட இயக்கத்தில் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். 15 நிமிடங்கள் உலர விட வேண்டும். ஓட்ஸ் இறந்த சரும செல்களை நீக்கும். பால் சருமத்தை ஈரப்பதமாக்கும். நன்கு உலர்ந்ததும் சருமத்தை நீரில் கழுவி விடலாம். இந்த ஃபேஸ் மாஸ்க் சருமத்தை மென்மையாக்குவதோடு பளபளப்பையும் கொடுக்கும்.

    அவகேடா - ஆலிவ் எண்ணெய்:

    அவகேடா பழத்தை பாதியாக வெட்டி, ஒரு துண்டை மட்டும் நன்றாக மசித்துக்கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் கலந்து முகத்தில் பூச வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து சருமத்தை நீரில் கழுவி விடலாம். அவகேடா பழத்தில் உள்ள இயற்கை எண்ணெய்களும், வைட்டமின்களும், ஆலிவ் எண்ணெய்யும் சருமத்திற்கு ஈரப்பதமூட்டும். வறண்ட சருமத்தை மென்மையாக்க உதவும்.

    வெள்ளரி - கற்றாழை:

    ஒரு வெள்ளரிக்காயை துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை கலந்து முகத்தில் தடவி, 20 நிமிடங்கள் உலர விட வேண்டும். வெள்ளரி சருமத்திற்கு நீரேற்றத்தை வழங்கும். கற்றாழை சருமத்திற்கு மிருது தன்மையை அளிக்கும். புத்துணர்ச்சியையும் கொடுக்கும்.

    Next Story
    ×