வழிபாடு

ராமேஸ்வரம் பதஞ்சலி சித்தர் குரு பூஜை இன்று

Published On 2024-04-01 02:30 GMT   |   Update On 2024-04-01 02:30 GMT
  • சித்தர் பாரம்பரியத்தில் உள்ள 18 சித்தர்களில் பதஞ்சலியும் ஒருவர்.
  • ராமேஸ்வரத்தில் உள்ள ஜீவசமாதியில் இன்று குருபூஜை

தமிழ் சித்த (சைவ) பாரம்பரியத்தில் உள்ள 18 சித்தர்களில் பதஞ்சலியும் ஒருவர். பதஞ்சலி புகழ்பெற்ற யோக குருவான நந்தி தேவாவிடம் (சிவபெருமானின் தெய்வீக காளை) யோகா மற்றும் பிற பயிற்சிகளைக் கற்றுக்கொண்டார். சிவபெருமானால் தொடங்கப்பட்ட 18 யோக சித்தர்களில் நந்தியும் ஒருவர். நந்திதேவரின் சீடர்களில் பதஞ்சலி, தட்சிணாமூர்த்தி, திருமூலர், ரோமரிஷி, சட்டைமுனி ஆகியோர் அடங்குவர். ராமேஸ்வரத்தில் உள்ள ஜீவசமாதியில் இன்று குருபூஜை நடக்கிறது.

பதஞ்சலி சித்தரின் பூஜை முறைகள்:

தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளினால் மெழுகி அரிசிமாவினால் கோலமிட்டு அப்பலகையின் மேல் பதஞ்சலி முனிவரின் திருவுருவப்படத்தினை வைக்க வேண்டும் படத்தின் முன்பாக அலங்கரிக்கப்பட்ட திருவிளக்கினை வைத்து, நல்லெண்ணை ஊற்றி பஞ்சு திரி போட்டு இரண்டுமுக தீபமேற்ற வேண்டும். பொன்றி வஸ்திரம் அணிவித்து பொன்னிற மலர்களையும் பிச்சிப்பூ, முல்லைப்பூ போன்ற மலர்களாலும் பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.

பதினாறு போற்றிகள்

1. ஒரு நிலைப்பட்ட மனதை உடையவரே போற்றி!

2 ஆதி சேஷனின் அவதாரமே போற்றி!

3. ஒளிமயமானவரே போற்றி!

4. மந்திரத்தின் உருவமானவரே போற்றி!

5. கருணாமூர்தியே போற்றி

6. கடும் விசக்காற்று மூச்சுடையவரே போற்றி!

7. பூலோகச் சூரியனே போற்றி

8. ஞான வழிகாட்டுபவரே போற்றி!

9. பேரும் புகழும் உடையவரே போற்றி!

10. இன்மொழி பேசுபவரே போற்றி!

11 இகபரசுகம் தருபவரே போற்றி!

12. மகாவிஷ்ணு பிரியரே போற்றி!

13. அஷ்டமா சித்திகளையுடைவரே போற்றி!

14 அங்ஞானம் அகற்றுபவரே போற்றி

15. யோக சூத்திரம் அருளிய யோகியே போற்றி!

16.யோகங்கள் அனைத்தையும் தரும் பதஞ்சலி முனிவரே போற்றி!

இவ்வாறு பதினாறு போற்றி சொல்லி அர்ச்சனை செய்தவுடன் ஓம் க்லம் பதஞ்சலி சித்த பெருமானே போற்றி என்று 108 முறை பக்தியுடன் கூறி வழிபட வேண்டும்.

நிவேதனம்

இளநீர், கடுக்காய் தண்ணீருடன் தேன் கலந்த தீர்த்தம், பசும்பால், வாழைப்பழம் போன்றவை நிறைவாக தீபாராதனை செய்ய வேண்டும். பதஞ்சலி முனிவரின் பூஜையின் பலன்கள்:

1. ஜாதகத்தில் உள்ள வியாழ கிரக தோஷ நிவர்த்தியுண்டாகும்.

2 குடும்ப ஒற்றுமை உண்டாகும்.

3. செல்வம் பெருகும், மகிழ்ச்சியுண்டாகும்.

4. எலும்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமடையும்.

5. நன் மக்கட்பேறு உண்டாகும்.

6. கல்விக்கலைகளில் சிறந்து விளங்குவார்கள்.

7. தடைகள் நீங்கி எல்லாவற்றிலும் வெற்றியுண்டாகும்.

8. உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள் விலகும்.

9. எல்லா நலன்களும் சூழ இன்புற்று வாழ்வார்கள்.

இவரை வழிபட வியாழக்கிழமை சிறந்த தினமாகும். பதஞ்சலி முனிவர் பங்குனி மாதம் மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தார் இவர் வாழ்ந்த காலம் 5 யுகம் 7 நாள் ஆகும்.

Tags:    

Similar News