search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோஹிங்கியா விவகாரம்: மனித உரிமை மீறல் தொடர்பாக நியாயமான விசாரணை தேவை - டில்லெர்சன்
    X

    ரோஹிங்கியா விவகாரம்: மனித உரிமை மீறல் தொடர்பாக நியாயமான விசாரணை தேவை - டில்லெர்சன்

    மியான்மர் மீது பொருளாதார தடை விதிக்க இது தக்க நேரமில்லை என கூறியுள்ள அமெரிக்க வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சன், ரோஹிங்கியா விவகாரத்தில் நம்பகமான விசாரணை கோரியுள்ளார்.
    நைப்பியிதோ:

    மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். வங்காளதேசம் நாட்டில் இருந்து குடிபெயர்ந்து மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டவர்களாக இருக்கும் இவர்களில் சிலர், கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ராணுவத்தினரின் தாக்குதலால் உயிருக்கு பயந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்காளதேசத்திற்கு தப்பிச் சென்ற வண்ணம் உள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான ஆற்றின் வழியாக படகில் செல்லும் பலர் விபத்துகளில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர். மியான்மரில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடிகளின்மீது கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி ரோஹிங்கியா போராளிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அவர்களுக்கு எதிரான ராணுவ வேட்டை தீவிரம் அடைந்தது.

    மியான்மரில் ராணுவ நடவடிக்கைகள் தொடங்கிய நாளில் இருந்து சுமார் 6 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி அண்டைநாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். ரக்கினே மாநிலத்துக்குள் பத்திரிகையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.



    பலகாலமாக மியான்மரின் ஆட்சியை கைப்பற்றி வைத்திருந்த ராணுவம் ஆட்சியாளர்களின் கட்டளைக்கு கீழ்படிய மறுத்து இஸ்லாம் மதத்தினரான ரோஹிங்கியா மக்கள்மீது அடக்குமுறையை பயன்படுத்தி வருவதாக சில நாடுகள் குற்றம்சாட்டுகின்றன.

    மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது ராணுவம் நடத்திவரும் ஒடுக்குமுறைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் உள்பட பல உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் மியான்மர் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது பயணத்தில் ராணுவ அதிகாரிகள், ரோகிங்கியா மக்கள் என பல தரப்பினரையும் அவர் சந்தித்து பேசினார். இதனையடுத்து, அந்நாட்டின் தலைமை ஆலோசகராக இருக்கும் ஆங் சான் சூகியுடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது, ‘மியான்மர் மீது பொருளாதார தடைகள் வேண்டும் என அறிவுறுத்தல்கள் வருகின்றன. ஆனால், இது அதற்கான நேரம் இல்லை. நடந்த காட்சிகள் கொடூரமானவை. மனித உரிமைகள் மீறப்பட்டது தொடர்பாக நம்பகமான விசாரணை வேண்டும்’ என டில்லர்சன் கூறினார்.

    மியான்மர் தலைமை ஆலோசகர் ஆங் சான் சூகி கூறும் போது, இவ்விவகாரத்தில் அமைதியாக இருக்கப்போவது இல்லை என்றார்.

    முன்னதாக, பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற ஆசியான் உச்சி மாநாட்டுக்கு இடையில் மியான்மர் அரசின் தலைமை ஆலோசகரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகியை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் சந்தித்து, ரக்கினே மாநிலத்தில் உள்ள மக்களுக்கு மனிதநேய அடிப்படையிலான உதவிகள் சென்று சேருவதை உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
    Next Story
    ×