search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயங்கொண்டம் அருகே தூங்கி கொண்டிருந்த பெண் உயிருடன் எரித்துக்கொலை
    X

    ஜெயங்கொண்டம் அருகே தூங்கி கொண்டிருந்த பெண் உயிருடன் எரித்துக்கொலை

    ஜெயங்கொண்டம் அருகே நள்ளிரவில் தூங்கி கொண்டிருந்த பெண் உயிருடன் எரித்துக்கொலை செய்யப்பட்டார். அவரது மகள் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி வருகிறார்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ளது முட்டுவாச்சேரி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 85). இவரது மனைவி மங்களம் (70). விவசாய குடும்பத்தை சேர்ந்த இந்த தம்பதிக்கு கலைச்செல்வி, இந்திரா காந்தி என்ற மகள்களும், ராஜேந்திரன், ரவிச்சந்திரன், ஆசைத்தம்பி என்ற மகன்களும் உள்ளனர்.

    இதில் மகள் இந்திராகாந்தி தவிர மற்ற அனைவரும் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். இந்திராகாந்திக்கு திருமணமாகி தனது கணவருடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். கலைச்செல்விக்கும் திருமணமாகி பின்னர் கணவரை பிரிந்தார்.

    எனவே அவர் தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அனைவரும் சாப்பிட்ட பின்னர் மகன்கள் 3 பேரும் அருகில் உள்ள கொட்டகை வீட்டிற்கு தூங்க சென்றனர்.

    கணேசன், மங்களம், மகள் கலைச்செல்வி ஆகிய 3 பேரும் தொகுப்பு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த மங்களம் மற்றும் அவரது மகள் கலைச்செல்வி மீது மண்எண்ணையை ஊற்றி தீ வைத்தனர்.

    உடல் முழுவதும் தீ பரவியதால் பதறி எழுந்த மங்களமும், கலைச்செல்வியும் வலியால் துடித்து காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சல் போட்டனர். இந்த சத்தம் கேட்டு மற்றொரு அறையில் படுத்திருந்த கணேசன் மற்றும் அக்கம் பக் கத்தினர் திரண்டு ஓடிவந்தனர். இதைப்பார்த்ததும் தீ வைத்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    ஆனால் அதற்குள் மங்களம் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தார். அவரது மகள் கலைச்செல்வி உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனடியாக அவர் அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த பயங்கர சம்பவம் குறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் கலைச்செல்வி கணவரை பிரிந்து வந்ததால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்த கொடூர செயல் நடந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    Next Story
    ×