search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை-பணம் கொள்ளைநடந்த வீட்டில் போலீஸ் மோப்பநாய் புருணே மோப்பம் பிடித்த காட்சி.
    X
    நகை-பணம் கொள்ளைநடந்த வீட்டில் போலீஸ் மோப்பநாய் புருணே மோப்பம் பிடித்த காட்சி.

    விருத்தாசலத்தில் தனியார் கம்பெனி அதிகாரி வீட்டில் ரூ.7 லட்சம் நகை-பணம் கொள்ளை

    விருத்தாசலத்தில் தனியார் கம்பெனி அதிகாரி வீட்டில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் திருவள்ளுவர் 13-வது குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(வயது 47). இவரது மனைவி கலைச்செல்வி(36). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    பாலசுப்பிரமணியன் வெளிநாட்டில் தனியார் கம்பெனி ஒன்றில் அதிகாரியாக வேலைபார்த்து வருகிறார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.

    இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு பாலசுப்பிரமணியன் அரியலூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். இதை அறிந்த மர்மமனிதர்கள் நள்ளிரவில் வீட்டின் முன்பக்க பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் அவர்கள் அங்கிருந்த 3 பீரோக்களை உடைத்தனர். அதில் இருந்த ரூ.2 லட்சம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர். நேற்று இரவு பாலசுப்பிரமணியன் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிமணிகள் கீழே சிதறிக்கிடந்தன. அதில் இருந்த பணம்-நகை கொள்ளை போயிருந்தது. மொத்தம் ரூ.7 லட்சம் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

    பீரோக்களில் இருந்த பொருட்கள் கீழே சிதறிக்கிடக்கும் காட்சி.

    இந்தகொள்ளை குறித்து பாலசுப்பிரமணியன் விருத்தாசலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் குப்புசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    மேலும் இந்த கொள்ளையில் துப்பு துலக்க விழுப்புரத்தில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தடயங்களை சேகரித்தனர். கடலூரில் இருந்து போலீஸ் மோப்பநாய் புருனே வரவழைக்கப்பட்டது. அது கொள்ளைநடந்த வீட்டை மோப்பம் பிடித்து வீட்டை விட்டு வெளியே வந்தது. அது சிறிது தூரம் ஓடி நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    இந்தகொள்ளை குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அதிகாரி வீட்டில் நகை-பணம் கொள்ளைபோன சம்பவம் அந்தபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×