search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் படகு மீது கப்பல் மோதியது: 4 மீனவர்கள் கடலில் மூழ்கினர்
    X

    கேரளாவில் படகு மீது கப்பல் மோதியது: 4 மீனவர்கள் கடலில் மூழ்கினர்

    கேரளாவில் விசைப்படகு மீது கப்பல் மோதியதில் குமரியைச் சேர்ந்தவர்கள் உள்பட 4 மீனவர்கள் கடலில் மூழ்கினர். தொடர்ந்து அந்த மீனவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
    களியக்காவிளை:

    குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று அங்கு தங்கியிருந்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேபோல அண்டை மாநிலமான கேரளாவுக்கும் ஏராளமான மீனவர்கள் சென்று விசை படகு மூலம் மீன் பிடித்து வருகிறார்கள்.

    குமரி மேற்கு மாவட்டம் சின்னத்துறையை சேர்ந்த ஆண்றோ என்பவரும் தனக்கு சொந்தமான விசை படகு மூலம் கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.

    இவரது விசைப்படகு மூலம் இவரும், சின்னத்துறையை சேர்ந்த சேவியர், ரம்யாஸ், நெல்லை மாவட்டம் ராதாபுரத்தை சேர்ந்த கார்த்திகேயன், கேரள மாநிலம் பூவாரை சேர்ந்த ஜாண்சன், பிரின்ஸ் ஆகிய 6 மீனவர்களும் கடந்த 10-ந்தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    நேற்று இரவு 8.30 மணி அளவில் கொச்சியில் இருந்து 50 நாட்டிக்கல் மைல் தொலைவில் அவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக சென்ற ஒரு கப்பல் இவர்களது விசைப்படகு மீது பயங்கரமாக மோதியது. பிறகு அந்த கப்பல் நிற்காமல் சென்றுவிட்டது.

    கப்பல் மோதியதில் குமரி மீனவர்களின் படகு 2 ஆக உடைந்து கடலில் மூழ்கியது. படகில் இருந்த சின்னத்துறையை சேர்ந்த மீனவர் சேவியர், ராதா புரத்தை சேர்ந்த மீனவர் கார்த்திகேயன் ஆகியோர் படகின் உடைந்த பாகங்களை பிடித்துக்கொண்டு கடலில் தத்தளித்தனர். சின்னத்துறையைச் சேர்ந்த ஆண்டனி, ரம்யாஸ் உள்பட 4 மீனவர்களும் படகுடன் கடலில் மூழ்கினார்கள்.

    இந்த நிலையில் கொச்சி கடலோர காவல்படையினர் தங்கள் படகில் அந்த வழியாக ரோந்து வந்தனர். அப்போது கடலில் படகின் உடைந்த பாகங்கள் மிதப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கடலில் தேடுதல் வேட்டை நடத்தியபோது கடலில் தத்துளித்துக்கொண்டிருந்த சேவியரையும், கார்த்திகேயனையும் மீட்டனர்.

    அவர்கள் இருவரையும் படகு மூலம் கரைக்கு கொண்டுவந்தனர். அங்குள்ள வைப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அந்த 2 மீனவர்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையில் கடலில் மூழ்கிய 4 மீனவர்களையும் தேடும் பணி நடந்து வருகிறது. கப்பல் படைக்கு சொந்தமான சிறிய விமானம் மற்றும் கடலோர காவல் படையினருக்கு சொந்தமான கப்பல்கள் மூலம் இந்த பணி நடக்கிறது. மேலும் உள்ளூர் விசைப்படகு மீனவர்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    ஆனால் இதுவரை அந்த 4 மீனவர்களின் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. விசைப்படகின் இடிபாடுகளில் சிக்கி அவர்கள் 4 பேரும் கடலில் மூழ்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தொடர்ந்து அந்த மீனவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

    மேலும் கடலில் மூழ்கிய குமரி மீனவர்களின் குடும்பத்தினருக்கும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர். இதற்கிடையில் தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் சர்ச்சில் மாயமான மீனவர்களை உடனே மீட்க நடவடிக்கை வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

    Next Story
    ×