search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டிரைக்கில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு 8 நாள் சம்பளம் கிடைக்காது: அரசு நடவடிக்கை
    X

    ஸ்டிரைக்கில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு 8 நாள் சம்பளம் கிடைக்காது: அரசு நடவடிக்கை

    போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு 7-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை 8 நாட்கள் சம்பளம் கிடைக்காது என அரசு முடிவு செய்துள்ளது.
    சென்னை:

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பின் ஒரு பிரிவினர் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மறியல், ஆர்ப்பாட்டம் செய்து கைதானார்கள். அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு மதுரை ஐகோர்ட்டு தடை விதித்த போதிலும் அதையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 15-ந் தேதி ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கோர்ட்டில் ஆஜராகி போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக நீதிபதிகள் முன்னிலையில் தெரிவித்தனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தலைமை செயலாளர் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    இதற்கிடையில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட ஊழியர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என்று அந்தந்த துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மேலும் வேலை நிறுத்தம் செய்த காலத்தை ‘‘நோ ஒர்க்’’ நோ பே’’ என்ற அடிப்படையில் சம்பளத்தை பிடித்தம் செய்யவும் அரசு முடிவு செய்துள்ளது.

    2003-ம் ஆண்டு நடந்த அரசு ஊழியர் வேலை நிறுத்தத்தின் போது சம்பள பிடித்தம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதுபோல தற்போது நடந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    போராட்டம் நடத்திய 7-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை 8 நாட்கள் (சனி, ஞாயிறு உள்பட) சம்பளத்தை பிடிக்க அரசு முடிவு செய்வதாக தெரிகிறது.

    இந்தநிலையில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் தலைமை செயலாளர் நாளை (21-ந் தேதி) ஆஜராகிறார்.
    Next Story
    ×