search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மர்ம காய்ச்சலால் இறந்த மாணவி ஐஸ்வர்யா
    X
    மர்ம காய்ச்சலால் இறந்த மாணவி ஐஸ்வர்யா

    திருச்சி அருகே ‘மர்ம’ காய்ச்சல் பாதித்த 8-ம் வகுப்பு மாணவி பலி

    திருச்சி அருகே மர்ம காய்ச்சலுக்கு 8-ம் வகுப்பு மாணவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    தொட்டியம்:

    திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள சேந்தமாங்குடியை சேர்ந்தவர் சுப்பிரமணி, விவசாயி. இவரது மகள் ஐஸ்வர்யா (வயது 13). அய்யம்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் 8-ம்வகுப்பு படித்து வந்தார். சுப்பிரமணி இறந்து விட்டதால் தாயின் பராமரிப்பில் ஐஸ்வர்யா வளர்ந்து வந்தார்.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஐஸ்வர்யா காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவரை முசிறி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்ததை தொடர்ந்து காய்ச்சல் குணமாகியது. இதையடுத்து வீட்டிற்கு வந்த அவர் பள்ளிக்கு சென்றார்.

    இந்த நிலையில் நேற்று ஐஸ்வர்யாவுக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அவரது பெற்றோர் முசிறி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது அவருக்கு காய்ச்சலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து ஐஸ்வர்யாவை அவரது உறவினர்கள் முசிறியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை ஐஸ்வர்யா இறந்தார்.

    மர்ம காய்ச்சலால் 8-ம் வகுப்பு மாணவி பலியானது அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சேந்தமாங்குடி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு முசிறி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதேபோல் தொட்டியம் அருகே உள்ள மேலக்காரைக் காடு கிராமத்திலும் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட டிரைவர் ரமேஷ் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்தார். தொடர்ந்து காய்ச்சல் பரவி வருவது முசிறி, தொட்டியம் பகுதி பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    எனவே பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீரை ஆய்வு செய்ய வேண்டும். கிராமம் முழுவதும் சுகாதாரப்பணிகளை தீவிரப்படுத்த வேண்டும், மருத்துவ குழுக்களை கிராமத்திற்கு அனுப்பி முகாம் அமைத்து மக்களுக்கு உரிய சிகிச்சை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×