search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி.டி.வி.தினகரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தாமதிப்பது ஏன்?
    X

    டி.டி.வி.தினகரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தாமதிப்பது ஏன்?

    இரட்டை இலை பெற தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தாமதிப்பது ஏன்? என்பது குறித்து போலீசார் விளக்கம் தர டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டது.
    புதுடெல்லி:

    இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி.தினகரன் மற்றும் கைதானவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தாமதிப்பது ஏன்? என்பது குறித்து போலீசார் விளக்கம் அளிக்க வேண்டும் என்று டெல்லி கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.

    இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் கமிஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி.தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜூனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், ஹவாலா ஏஜெண்டுகள் நரேஷ், லலித்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.



    இவர்களில் சுகேஷ் சந்திரசேகர் தவிர மற்ற அனைவரும் ஜாமீனில் விடுதலை ஆனார்கள். சுகேஷ் சந்திரசேகருக்கு ஜாமீன் கிடைக்காததால் அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் டெல்லி தீஸ் ஹசாரி கோர்ட்டில் நீதிபதி கிரண் பன்ஸல் முன்னிலையான அமர்வு முன்பு நேற்று சுகேஷ்சந்திரசேகர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சுகேஷ் சந்திரசேகரின் நீதிமன்ற காவலை அடுத்த மாதம் (டிசம்பர்) 14-ந்தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    இதனைத்தொடர்ந்து கோர்ட்டில் ஆஜரான விசாரணை அதிகாரி சஞ்ஜய் ஜெராவத்திடம் நீதிபதி, ‘தினகரன் உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தாமதிப்பது ஏன்?’ என்று கேள்வி எழுப்பினார்.

    அப்போது போலீஸ் தரப்பில், ‘வருகிற 5-ந்தேதி டெல்லி ஐகோர்ட்டில் சுகேஷ் சந்திரசேகர் ஜாமீன் வழக்கு விசாரணைக்கு வருகிறது. மேலும் நேற்றுமுன்தினம் புதிதாக ஒருவரை கைது செய்திருக்கிறோம். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் மேலும் 3 அல்லது 4 பேர் கைதாக வாய்ப்பு உள்ளது. எனவே தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தாமதமாகிறது’ என்று தெரிவித்தார்.

    அப்போது நீதிபதி, ‘இந்த கோர்ட்டு சுகேஷூக்கு பலமுறை ஜாமீன் வழங்க மறுத்துள்ளது. ஐகோர்ட்டில் அவருடைய ஜாமீன் மீதான விசாரணை வருவதற்கும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது?. எவ்வளவு நாட்கள் தான் வழக்கு விசாரணையை நடத்தாமல் இப்படி வைத்திருப்பது?’ என்று கடுமையான கேள்விகளை எழுப்பினார்.



    பின்னர், டிசம்பர் 14-ந்தேதி டெல்லி போலீஸ் துணை கமிஷனர் பிரவீண் ரஞ்ஜன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
    Next Story
    ×