search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் மதம் மாற்றி திருமணம்: தேசிய புலனாய்வு குழு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
    X

    கேரளாவில் மதம் மாற்றி திருமணம்: தேசிய புலனாய்வு குழு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

    இளம்பெண்ணை மதம் மாற்றி திருமணம் செய்தது செல்லாது என்னும் கேரள ஐகோர்ட் உத்தரவை எதிர்த்த வழக்கில் ஓய்வுபெற்ற நீதிபதி மேற்பார்வையில் தேசிய புலனாய்வு குழு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தை அடுத்த வைக்கம் பகுதியை சேர்ந்தவர் அசோகன். ஓய்வுபெற்ற ராணுவ வீரர்.

    இவரது மகள் அகிலா (வயது 24). இவர் சேலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த ஆண்டு அகிலா திடீரென மாயமானார். இதுபற்றி அசோகன் பெருந்தல்மன்னா போலீசில் புகார் செய்தார். போலீசாரால் அகிலாவை கண்டுபிடிக்க முடியவில்லை.

    எனவே அகிலாவின் தந்தை அசோகன் கேரள ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதில் சேலத்தில் படித்து வந்த தன் மகளை அவருடன் படித்த சிலர் கடத்தி சென்று வேறு மதத்திற்கு மாற்றிவிட்டனர். அவர்களுடன் என் மகள் தங்கியுள்ளார். அவரை மீட்டு என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

    இம்மனுவை விசாரித்த கோர்ட்டு, இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி அகிலாவை கண்டு பிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. போலீசார் அகிலாவை தேடிவந்த நிலையில் அகிலா, கோர்ட்டில் ஆஜரானார்.

    அப்போது அவர் நீதிபதி முன்பு சொந்த விருப்பத்தின் பேரிலேயே மதம் மாறியதாகவும், இப்போது அறக்கட்டளை ஒன்றில் தங்கியிருப்பதாகவும் கூறினார். அவரது கருத்தை கோர்ட்டு பதிவு செய்து கொண்டதோடு அகிலாவை அவர் விருப்பப்படி செல்ல அனுமதித்தது.

    இதையடுத்து அகிலாவின் தந்தை அசோகன் மீண்டும் கேரள ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் தன் மகளை தீவிரவாத இயக்கத்தில் சேர்க்க முயற்சி நடக்கிறது. மதம் மாற்றி திருமணம் செய்தவர்கள் அவரை சிரியாவுக்கு கடத்தி செல்ல முயற்சிப்பதாகவும் கூறியிருந்தார்.

    இந்த மனு மீதான விசாரணை நடந்து கொண்டிருந்தபோது அகிலா மீண்டும் கோர்ட்டில் ஆஜரானார். அப்போது அவர் ஷபின் ஜஹான் என்பவருடன் தனக்கு திருமணம் ஆகிவிட்டதாக கூறினார். திருமணத்தை பதிவு செய்ய அப்பகுதியில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் பணம் செலுத்தியதற்கான ரசீதையும் கோர்ட்டில் சமர்ப்பித்தார்.

    ஆனால், இந்த திருமணத்தை ஏற்க கோர்ட்டு மறுத்தது. காணாமல் போனதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் இருக்கும்போது எப்படி திருமணம் செய்யலாம்? என்று அகிலாவுக்கு கோர்ட் கண்டனம் தெரிவித்தது. மேலும், இத்திருமணத்தை பதிவு செய்யக்கூடாது என்று பஞ்சாயத்து அலுவலக செயலாளருக்கும் உத்தரவு பிறப்பித்தது. மேலும், அகிலாவை எர்ணாகுளம் மகளிர் காப்பகத்துக்கு அனுப்பவும் உத்தரவிட்டது.



    இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் ஷபின் ஜகான் மேல்முறையீடு செய்தார். அதில், ‘24 வயதாகும் மேஜரான பெண்ணுக்கு யாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும், எந்த மத நம்பிக்கையைப் பின்பற்ற வேண்டும் என்று முடிவு செய்யும் உரிமை உள்ளது’ என்று அவர் தெரிவித்திருந்தார்.

    இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

    அப்போது, ஷபின் ஜகான் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், இந்திரா ஜெய்சிங் ஆகியோர் ஆஜராயினர். அவர்கள் வாதிடுகையில் கூறியதாவது:

    இந்த திருமணத்தை கேரள உயர் நீதிமன்றம் ரத்து செய்தது துரதிருஷ்டவசமானது. சம்பந்தப்பட்ட பெண்ணை சந்திக்க கணவருக்குக் கூட அனுமதி வழங்கவில்லை. அந்தப் பெண்ணை அழைத்து இந்த நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். அவர் பாதுகாப்பாக இருக்கிறாரா, சுதந்திரமாக இருக்கிறாரா, அவர் உயிருடன்தான் இருக்கிறாரா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.

    அந்தப் பெண்ணின் வீட்டை சுற்றி போலீசார் உள்ளனர். அவரை சந்திக்க யாரையும் அனுமதிக்கவில்லை. இன்னும் 24 மணி நேரத்தில் அந்தப் பெண்ணை இந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அவரது தந்தைக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு கபில்சிபல், இந்திரா ஜெய்சிங் ஆகியோர் வாதிட்டனர்.

    பெண்ணின் தந்தை அசோகனின் சார்பில் மூத்த வழக்கறிஞர் மாதவி திவான் வாதிடுகையில், ‘அசோகனுக்கு அகிலா ஒரே பெண். சில சதி வேலைகளால் அவர் மனரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளார். அதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியும். அவற்றை உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்யட்டும். அதன் பிறகு, பெண்ணை ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டால் அதில் பெண்ணின் தந்தைக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை’ என்றார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் தேசிய புலனாய்வு ஏஜென்சியின் (என்ஐஏ) சார்பில் ஆஜராகும்படி கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மனீந்தர் சிங்கை கேட்டுக் கொண்டனர். மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஆவணங்களை கேரள போலீசார் தேசிய புலனாய்வு ஏஜென்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அப்போது, அந்தப் பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கபில்சிபலும் இந்திரா ஜெய்சிங்கும் தொடர்ந்து வலியுறுத்தினர்.

    அதைகேட்ட நீதிபதிகள், ‘அது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. மேலும் கேரள உயர் நீதிமன்றத்தில் வெவ்வேறு தருணங்களில் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களில் ஆசியா, அதியா, ஹதியா என்று 3 பெயர்களை அகிலா மாற்றி மாற்றி கொடுத்துள்ளார். 24 வயதான பெண்ணிடம் இருந்து இப்படி எதிர்பார்க்கவில்லை. அந்தப் பெண்ணை நாங்கள் பார்க்க விரும்பினால், அதற்கான உத்தரவை பிறப்பிக்க முடியும். ஆனால், இது உணர்ச்சிப்பூர்வமான வழக்கு.

    மேலும், அவசரமாகவும், ரகசியமாகவும் இந்தத் திருமணம் ஏன் நடத்தப்பட்டது? இது லவ் ஜிஹாத் எனப்படும் மதம் மாற்றி திருமணம் செய்து தீவிரவாதிகளாக மாற்றும் ‘லவ் ஜிஹாத்’ தொடர்புடையதாக இருக்கக்கூடும் என்று கேரள உயர் நீதிமன்றம் சந்தேகம் எழுப்பி உள்ளது. அத்துடன் உயர் நீதிமன்றம் கூறியுள்ளபடி ஷபின் ஜகான் மீது கிரிமினல் வழக்கு ஏதும் இருக்கிறதா? என்பதும் தெரிய வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் இவ்வழக்குன் மறுவிசாரணையை ஆகஸ்ட் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    இந்நிலையில், இன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அகிலா-ஷபின் ஜஹான் திருமண விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஆர்.வி. ரவீந்திரன் மேற்பார்வையில் தேசிய புலனாய்வு ஏஜென்சியின் விசாரணைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    Next Story
    ×