search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உரிய பராமரிப்பு இல்லாததே திருச்செந்தூர் கோவில் விபத்துக்கு காரணமா?: பக்தர்கள் புகார்
    X

    உரிய பராமரிப்பு இல்லாததே திருச்செந்தூர் கோவில் விபத்துக்கு காரணமா?: பக்தர்கள் புகார்

    திருச்செந்தூர் முருகன் கோவிலின் பிரகார மண்டபம் உரிய முறையில் பராமரிக்க படாததே விபத்துக்கு காரணம் என பக்தர்கள் புகாரளித்துள்ளனர்.
    திருச்செந்தூர்:

    முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திகழ்வது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இங்கு தினமும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள். தற்போது கார்த்திகை மாதம் என்பதால் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது.

    பக்தர்கள் கோவிலை சுற்றி வருவதற்காக 1974-ம் ஆண்டு பிரகார மண்டபம் கட்டப்பட்டது. இந்த மண்டபத்தின் வழியாகத்தான் பக்தர்கள் அங்க பிரதட்சனம் செய்வார்கள். மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த மண்டபத்தில் ஓய்வு எடுக்கவும், உணவு அருந்தவும் அமர்ந்திருப்பார்கள்.

    இந்நிலையில் வள்ளி குகைக்கு எதிரே உள்ள பிரகார மண்டபத்தின் ஒருபகுதி இன்று திடீரென இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாட்டில் பக்தர்கள் சிலர் சிக்கி கொண்டனர். இதை பார்த்த அந்த பகுதியில் நின்ற மற்ற பக்தர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இதுகுறித்து திருச்செந்தூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசாரும், சாத்தான்குளம் மற்றும் திருச்செந்தூர் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் இடிபாடுகளை முழுமையாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது இடிபாட்டில் சிக்கிய பெண் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார். மேலும், ஒருவர் பலியானதாகவும், காயமடைந்த இருவர் அங்கிருந்து மீட்கப்பட்டு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இடிபாட்டில் சிக்கி இறந்தவர் திருச்செந்தூர் முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரவி என்பவரின் மனைவி பேச்சியம்மாள் (வயது 45) என்பது தெரியவந்தது.

    இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் திருச்செந்தூர் கோவிலுக்கு விரைந்து வந்து இடிந்து விழுந்த பகுதிகளை பார்வையிட்டார்.

    பிரகார மண்டபம் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலியானதை அடுத்து திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் நடை சாத்தப்பட்டது. மேலும், இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திருச்செந்தூர் விரைந்துள்ளார்.

    உரிய முறையில் கட்டிடம் பராமரிக்கவில்லை என ஆலய பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அடிக்கடி கட்டிடத்தின் உறுதி தண்மையை ஆராய்ந்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.
    Next Story
    ×