search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணிமுத்தாறு-குதிரையாறு அணைகளில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
    X

    மணிமுத்தாறு-குதிரையாறு அணைகளில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

    மணிமுத்தாறு மற்றும் குதிரையாறு அணைகளில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.
    சென்னை:

    மணிமுத்தாறு மற்றும் குதிரையாறு அணைகளில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அணையிலிருந்து மணிமுத்தாறு பிரதானக் கால்வாயின் 1வது முதல் 4வது பிரிவுகளின் கீழ் உள்ள பாசன நிலங்களுக்கு பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருமக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

    வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அணையிலிருந்து மணிமுத்தாறு பிரதானக் கால்வாயின் 1வது முதல் 4வது பிரிவுகளின் கீழ் உள்ள பாசன நிலங்களுக்கு பிசான பருவ சாகுபடிக்கு 20.12.2017 முதல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம், நாங்குநேரி, திருநெல்வேலி, பாளையங்கோட்டை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் மற்றும் சாத்தான்குளம் வட்டங்களில் உள்ள 22,852 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    இதேபோல், திண்டுக்கல் மாவட்டம், குதிரையாறு அணையிலிருந்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்கள் பயன்பெறும் வகையிலும், குடிநீர் மற்றும் சமுதாய பயன்பாட்டிற்காகவும் தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருமக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திண்டுக்கல் மாவட்டம், குதிரையாறு அணையிலிருந்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்கள் பயன்பெறும் வகையிலும், குடிநீர் மற்றும் சமுதாய
    பயன்பாட்டிற்காகவும் 14.12.2017 முதல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால், திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 6113.86 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×