search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘ஏர் அறிஞர்’ விருது: வெங்கையா நாயுடு வழங்கினார்
    X

    வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘ஏர் அறிஞர்’ விருது: வெங்கையா நாயுடு வழங்கினார்

    வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘ஏர் அறிஞர்’ என்ற விருதை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார்.
    சென்னை:

    வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘ஏர் அறிஞர்’ என்ற விருதை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார்.

    சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி கலை அரங்கில் நேற்று டெல்லி வேளாண் அறிவியல் தமிழ் கழகம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் ஆகியவை சார்பில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘ஏர் அறிஞர்’ விருது வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு எம்.எஸ்.சுவாமி நாதனுக்கு ஏர் அறிஞர் விருதை வழங்கினார். விழாவில் வெங்கையா நாயுடு பேசியதாவது:-

    வேளாண்மை தான் நமது நாட்டின் அடிப்படை கலாசாரம். அரிசி, கோதுமையை அதிக அளவில் விளைவிக்க பாடுபட்டு, பசுமை புரட்சியை உருவாக்கிய எம்.எஸ்.சுவாமிநாதன் போல வருங்காலத்தில் நிறைய பேர் வரவேண்டும். அதிக தானியங்களை விளையச் செய்யவேண்டும். வேளாண் புரட்சியால் தான் அதிகத்தரம் இல்லாத கோதுமை இறக்குமதி செய்த இந்தியாவில் இருந்து தரமான கோதுமை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    விவசாய கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் எல்லாம் எப்படி உணவு உற்பத்தியை பெருக்குவது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். வேளாண் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அப்போது தான் விவசாயிகளை சுரண்டுவது நிற்கும்.

    விவசாயத்திற்கு முதலில் தண்ணீர் வசதி தேவை. விளைபொருட்களை விற்கவும், சாலைவசதி, அதை சேமித்துவைக்க குளிரூட்டும் வசதி, சந்தைப்படுத்தும் வசதி ஆகியவற்றை வாஜ்பாய் கொண்டுவந்தார். அவர் பிரதமராக இருந்தபோது இந்த வசதிகளுடன் தொழில்நுட்ப வசதிகளையும் கொண்டுவந்தார்.

    இந்தியாவின் தலைசிறந்த மகனான எம்.எஸ்.சுவாமிநாதன் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பிறந்தவர், அவருக்கு 92 வயதாகிறது. அவர் பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றவர். இளைஞர்கள் அனைவரும் அவரை போல விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு வெங்கையா நாயுடு பேசினார்.

    விருது பெற்ற விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஏற்புரை வழங்கியபோது, ‘நவீன தொழில்நுட்பத்தை விவசாயத்தில் எப்படி பயன்படுத்துவது என்பதை இளைஞர்கள் கற்றுக்கொள்ளுங்கள். விவசாயம் இன்றி எதுவும் செய்ய முடியாது. உணவுப் பொருளை அதிக அளவில் விளைவிக்க அனைவரும் நினைக்க வேண்டும். எனக்கு விருது வழங்கிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.

    விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக் கண்ணு, தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ்.திலகர், வேளாண்மை அறிவியல் தமிழ் கழகம் நிறுவன தலைவர் டாக்டர் எம்.முத்தமிழ் செல்வன், வேளாண்மை ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறை முன்னாள் செயலாளர் எஸ்.அய்யப்பன் உள்பட பலர் பேசினார்கள். அமைச்சர் கே.பாண்டியராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    முன்னதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கே.ராமசாமி வரவேற்றார். இறுதியில் மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ்.பெலிக்ஸ் நன்றி கூறினார். 
    Next Story
    ×