search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அம்மா வழியில் ஆட்சி நடத்தும் ஜெயக்குமாரும், வருங்கால குற்றவாளி: சாருஹாசன் கடும் பாய்ச்சல்
    X

    அம்மா வழியில் ஆட்சி நடத்தும் ஜெயக்குமாரும், வருங்கால குற்றவாளி: சாருஹாசன் கடும் பாய்ச்சல்

    அம்மா வழியில் ஆட்சி நடத்துவோம் என்று சொல்லும் வரை நீங்களும் வருங்கால குற்றவாளிகள் என்று அமைச்சர் ஜெயக்குமார் மீது சாருஹாசன் பாய்ந்துள்ளார்.
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பதிவுகள் மூலமாக தமிழக அரசை விமர்சித்து வருகிறார். தமிழகத்தை பாதிக்கும் அனைத்து பிரச்சினைகளுக்காகவும் குரல் கொடுத்து வரும் அவர் விரைவில் அரசியல் கட்சியை தொடங்கவும் திட்டமிட்டுள்ளார்.

    வருமான வரி சோதனையை மறைமுகமாக சுட்டிக்காட்டி குற்றவாளிகள் நாடாளக்கூடாது. மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும் என்றும் கமல் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்ததுடன், ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை கூறினால் கமல் மீது நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என்று தெரிவித்தார்.

    இந்த நிலையில் கமலின் அண்ணன் சாருஹாசனும் அமைச்சர் ஜெயக்குமார் மீது பாய்ந்துள்ளார். தனது முகநூல் பதிவு மூலமாக அவரை கடுமையாக சாடி உள்ளார்.

    இது தொடர்பாக சாருஹாசன் கூறி இருப்பதாவது:-



    அமைச்சர் ஜெயக்குமார், அம்மா வழியில் ஆட்சி நடத்துவதாக சொல்கிறார். இதைப்பார்க்கும் போது நாமும் 60 கோடிக்கும் குறையாமல் கொள்ளையடிப்போம் என்று சொல்கிறீர்களா? என்று கேட்க தோன்றுகிறது.

    உச்சநீதிமன்றம் அம்மா அவர்கள் தகுதிக்கு அதிகமாக அரசு ஊழியராக 60 கோடி சொத்து சேர்த்தார். அதை சசிகலாவுக்கு இனாமாக கொடுத்தார் (அல்லது தற்காலிகமாக கொடுத்து வைத்தார் என்று வைத்துக் கொள்வோம்) என்றும், இருவரும் குற்றவாளி என்றும் தீர்ப்பளித்தது. இந்த அமைச்சருக்கு நெஞ்சில் வீரமிருந்தால் இதை மறுக்க முடியுமா? இறந்தவர்களின் தவறுகளை மறக்கலாமே ஒழிய மன்னிக்க முடியாது.

    அமைச்சரே, நீர் அம்மா வழியில் ஆட்சி செய்வோம் என்று சொல்வது அரசியல் கொள்ளையை நியாயப்படுத்தும் முறையாக தெரிகிறது. கமல்ஹாசனை விட்டு விடுங்கள். ரசிகர்கள் கலகம் செய்யக்கூடும்.

    சாருஹாசன் சொல்கிறேன். அம்மா வழியில் ஆட்சி நடத்துவோம் என்று சொல்லும் வரை நீங்கள் வருங்கால குற்றவாளிகள் என்று தெரிகிறது.

    எனக்கு ரசிகர்கள் கிடையாது. ஒரு கலகமும் வராது. நான் உங்கள் அரசை நீதிமன்றத்தில் மட்டும்தான் சந்திப்பேன். என் வீட்டுவாசல் கதவு நிலையும் லஞ்சம் வாங்கியதில்லை. உங்கள் ஆட்சி தொடுக்கும் வழக்குகளை சந்திக்க தயார்.

    இவ்வாறு சாருஹாசன் அதில் குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×