search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை நீர்மட்டம் 52 அடியாக உயர்வு
    X

    மேட்டூர் அணை நீர்மட்டம் 52 அடியாக உயர்வு

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 52 அடியாக உயர்ந்தது. தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று பிற்பகல் முதல் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
    மேட்டூர்:

    தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை கடந்த வாரம் தீவிரம் அடைந்ததன் எதிரொலியாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதாவது, அணைக்கு வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடி வரை அதிகபட்சமாக தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழையின் அளவு குறைந்ததன் காரணமாகவும், கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதன் காரணமாகவும் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.

    இருப்பினும் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை விட அணைக்கு நீர்வரத்து கூடுதலாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் 51.83 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை 52.43 அடியாக உயர்ந்தது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,300 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வரும் நிலையில், அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரத்து 976 கனஅடி வீதம் தண்ணீர் வரத்து உள்ளதால் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.

    இந்த நிலையில் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று பிற்பகல் முதல் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×