search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இளம்பெண் மர்ம பலி: தவறான சிகிச்சை அளித்ததால் இறந்ததாக தனியார் ஆஸ்பத்திரி முற்றுகை
    X

    இளம்பெண் மர்ம பலி: தவறான சிகிச்சை அளித்ததால் இறந்ததாக தனியார் ஆஸ்பத்திரி முற்றுகை

    நாங்குநேரி அருகே தவறான சிகிச்சை அளித்தாதல் இளம்பெண் பலியான சம்பவம் குறித்து உறவினர்கள் தனியார் மருத்துவமனை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    களக்காடு:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மூலக்கரைப் பட்டியை அடுத்த கல்லத்தி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் உஷாராணி (வயது18). இவர் பிளஸ்-2 படித்து முடித்து விட்டு கல்லூரியில் சேருவதற்காக காத்திருந்தார்.

    நேற்று உஷா ராணிக்கு அளவுக்கு அதிகமாக ரத்தப் போக்கு மற்றும் வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு இருந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் உஷா ராணிக்கு ஊசி போட்டு ‘குளுகோஸ் டிரிப்’ ஏற்றி உள்ளனர். சிகிச்சை முடிந்து உஷாராணி வீட்டிற்கு வந்தார். ஆனால் உஷா ராணிக்கு வயிற்றுவலி குறையவில்லை. மேலும் அவருக்கு வாந்தி ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்தார்.

    மேலும் உஷா ராணியின் உடல் வி‌ஷத்தன்மை ஏறியது போல் நீலக்கலராகவும் மாறியதாக கூறப்படுகிறது. இதனால் அவரது உடலை மருத்துவ பரிசோதனை செய்ய நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவ பரிசோதனை நடக்கிறது.

    இதற்கிடையில் உஷா ராணியின் பெற்றோர் மற்றும் அந்த பகுதி மக்கள் தனியார் ஆஸ்பத்திரியில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் தான் உஷா ராணி இறந்து விட்டார் என்றும் எனவே சிகிச்சை அளித்த மருத்துவரை கைது செய்ய வேண்டும் என்று கூறி போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

    மேலும் இதை வலியுறுத்தி உஷா ராணியின் உடலை இன்று வாங்க மறுத்து மூலக்கரைப்பட்டி- நெல்லை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×