search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீன்பிடி தடை கால நிவாரணம் ரூ.5,500 ஆக உயர்வு: அமைச்சர் மல்லாடி அறிவிப்பு
    X

    மீன்பிடி தடை கால நிவாரணம் ரூ.5,500 ஆக உயர்வு: அமைச்சர் மல்லாடி அறிவிப்பு

    மீன்பிடி தடை கால நிவாரணம் ரூ.5,500 ஆக உயர்த்தி வழங்குவதாக சட்டசபையில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் பூஜ்யநேரத்தில் அதிமுக உறுப்பினர் அன்பழகன் பேசியதாவது:-

    மாநிலம் முழுவதும் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர். மீன் பிடி தடை காலத்தில் நிவாரணமாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படுகிறது.

    இந்நிலையில் தடை காலத்தை 45 நாளில் இருந்து 61 நாளாக மத்திய அரசு அதிகரித்துள்ளது. நாளையோடு தடைகாலம் முடிகிறது. கூடுதல் தடை காலத்திற்கும் சேர்த்து அரசு நிவாரணம் தர வேண்டும். கடந்த 4 மாதமாக துறைமுகம் தூர்வாராததால் விசைப்படகு மற்றும் எப்.ஆர்.பி. படகில் மீன்பிடிக்க செல்ல முடியவில்லை. அவர்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் கூறியிருந்தார். இதையும் அறிவிக்க வேண்டும்.

    ரூ.20 கோடியில் கிழக்கு கடற்கரை சாலையில் கட்டப்பட்ட நவீன மீன் அங்காடி 2 ஆண்டாக திறக்கப்படவில்லை. இதனால் கட்டிடம் பாழடைந்து சீர்கெடும் நிலையில் உள்ளது. அங்குள்ள கடைகளை மீன் விற்கும் பெண்களுக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டது.

    இதில் கவர்னர் தலையிட்டதால் இன்றுவரை கடைகள் யாருக்கும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எனவே உடனடியாக கடைகளை மீனவ பெண்களுக்கு ஒதுக்கி மீன் அங்காடியை திறக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இதற்கு பதிலளித்த அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பேசியதாவது:-

    மீன்பிடி தடைகால நிவாரணம் 61 நாட்களுக்கு ரூ.5 ஆயிரத்து 500 ஆக உயர்த்தி வழங்கப்படும். துறைமுகம் தூர்வாரப்படாததால் பாதிக்கப்பட்ட விசைப்படகு மற்றும் எப்.ஆர்.பி. படகு மீனவர்களுக்கு ரூ.75 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும்.

    சட்டசபையில் மானியக் கோரிக்கை விவாதம் முடிந்தபின் இந்த நிவாரணம், இழப்பீடு வழங்கப்படும். நிவாரணம், இழப்பீடு, மீனவர்களின் படகுகளை சீரமைக்க ரூ.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீன் அங்காடியில் கடை கேட்டு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன.

    இதில் 730 விண்ணப்பங்கள் தகுதியுடையதாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதை பரிசீலித்து வரும் ஜூலை ஒன்றாம் தேதி மீன் அங்காடியில் கடைகள் ஒதுக்கப்பட்டு திறக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×