search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகூர் அருகே மனைவியிடம் தவறாக நடக்க முயன்றதால் அண்ணனை வெட்டிக்கொன்ற தம்பி
    X

    பாகூர் அருகே மனைவியிடம் தவறாக நடக்க முயன்றதால் அண்ணனை வெட்டிக்கொன்ற தம்பி

    பாகூர் அருகே மனைவியிடம் தவறாக நடக்க முயன்றதால் அண்ணனை தம்பியே வெட்டி கொன்றார்.

    பாகூர்:

    பாகூர் அருகே கரையாம் புத்தூர் மெயின் ரோட்டில் வசித்து வந்தவர் சரவணன் (வயது 33).

    இவர், இருசக்கர வாகனத்தில் கிராமம், கிராமமாக சென்று பினாயில், சோப் போன்ற பொருட்களை விற்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    சரவணன் வீட்டில் அருகிலேயே அவரது தம்பி மனோஜ்குமார் வசித்து வருகிறார். இவர், மினிவேன் டிரைவர் ஆவார்.

    அண்ணன்- தம்பி இருவருக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. மதுகுடிக்கும் பழக்கம் உள்ள சரவணன் அடிக்கடி மது குடித்து விட்டு மனோஜ்குமார் வீட்டுக்கு சென்று தகராறு செய்வது வழக்கம்.

    அதுபோல் நேற்று இரவும் சரவணன் மது குடித்து விட்டு மனோஜ்குமார் வீட்டுக்கு சென்றார். அங்கு வீட்டில் இருந்த மனோஜ்குமாரின் மனைவி வள்ளியிடம் அவர் தகராறில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் போதை தலைக்கேறிய சரவணன் வள்ளியிடம் தவறாக நடக்க முயன்றார்.

    அப்போது அங்கு வந்த மனோஜ்குமார் அண்ணனின் செயலை கண்டு ஆத்திரம் அடைந்தார். சரவணனை சரமாரியாக தாக்கிய மனோஜ்குமார் ஆத்திரம் தீராமல் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சரவணனின் கழுத்தில் வெட்டினார். இதில் சரவணன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்து போனார்.

    இதனை பார்த்ததும் மனோஜ்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

    சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அதே பகுதியில் பதுங்கி இருந்த மனோஜ்குமாரை போலீசார் நள்ளிரவில் மடக்கி பிடித்தனர். அவரிடம் கொலை குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பாகூர் பகுதியில் கடந்த ஒரு மாதமாகவே கொலை, மதுகடை எரிப்பு போன்ற பரபரப்பு சம்பவங்கள் நடந்து வருகிறது.

    கடந்த 10-ந் தேதி பாகூரில் குடியிருப்பு பாளையத்தை சேர்ந்த சுவேதன் என்ற வாலிபரை தலையை வெட்டி கொன்று அந்த தலையை ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்தில் வீசி சென்றனர்.

    இந்த சம்பவம் பாகூர் பகுதியில் பீதியை ஏற்படுத்தியது. இந்த பீதி அடங்கும் முன்பே சோரியாங்குப்பத்தில் கிராம மக்கள் சாராயக்கடையை சூறையாடியும், மதுக்கடைகளை எரித்தும் போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

    இந்த நிலையில் கரையாம்புத்தூரில் அண்ணனை தம்பி வெட்டி கொன்ற சம்வத்தால் பாகூர் பகுதி மீண்டும் பரபரப்புக்குள்ளாகி உள்ளது.

    Next Story
    ×