search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெற்றோர்கள் நமது வாழ்க்கையின் வழிகாட்டிகள்
    X

    பெற்றோர்கள் நமது வாழ்க்கையின் வழிகாட்டிகள்

    நாம் அனைவரும் படித்து முடித்து நல்லதொரு வேலைக்கு சென்றதும் நமது பெற்றோரை கைவிடாமல் கடைசி வரை வைத்து காப்பாற்ற வேண்டும்.
    வளர்ந்துவரும் இன்றைய நவீன உலகில் பெற்றோர்களின் நிலை ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது. இந்த கேள்விக்குறியானது, வளரும் இளைய தலைமுறையினரின் கைகளில் அடங்கி உள்ளது. ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகளை சிறுவயது முதல் பெரியவனாகும் வரை தங்களின் அரவணைப்பில் வளர்த்து ஆளாக்குகின்றனர்.

    பிறந்தது முதல் 3 வயது வரை அக்குழந்தைக்கு பேச கற்றுக்கொடுக்கின்றனர். அதற்கு பிறகு பள்ளிக்கூடங்களில் சேர்த்து கல்வி அறிவையும், மற்றவற்றை பற்றியும் அறிய வழிவகை செய்கின்றனர். பள்ளிப்படிப்பை தொடரும்போதே அவர்களுக்கு பாட்டு, நடனம், விளையாட்டு, கணிப்பொறி முதலியவற்றை பகுதி நேரமாக கற்க வழி செய்கின்றனர். பள்ளிப்படிப்பை முடித்தவுடன், கல்லூரிகளில் அல்லது மருத்துவம், தொழில்துறை போன்றவற்றில் சேர்க்கின்றனர்.

    அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்கின்றனர். கல்லூரி படிப்பை முடித்தவுடன் அவர்களின் தகுதிக்கேற்ப ஒரு நல்ல வேலையை தேடி தருகின்றனர். அதன்பிறகு அவனுக்கு ஒரு மணவாழ்க்கையையும் அமைத்து தருகின்றனர். இது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். அதுபோல பிள்ளைகளும் தங்களது பெற்றோர்களுக்கு நன்றிக் கடனை செய்ய வேண்டும்.



    இன்றைய இளைஞர்களில் ஒருசிலர் தங்களின் பெற்றோர் செய்த அனைத்தையும் மறந்து விட்டு, அவர்களை அனாதையாக விட்டு விடுகின்றனர். சிலர், முதியோர் இல்லங்களில் தங்களது பெற்றோரை சேர்த்து விடுகின்றனர். தனிக்குடும்பமாக வாழ வேண்டும் என்று நினைக்கின்றனர். தங்களது பெற்றோர்களுடன் கூடி வாழ்வதை சங்கடமாக எண்ணுகின்றனர். நாகரிகம் வேண்டும் என்று தன்னை பெற்ற பெற்றோர்களை உதாசீனப்படுத்துகின்றனர்.

    பெற்றோர்களின் உணர்ச்சியை புரிந்து கொண்டு அவர்களது ஆயுட்காலம் வரை, அவர்களிடம் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு குழந்தைகளாய் நாம் இருக்கும்போது, எதற்கு முதியோர் இல்லங்களில் சேர்க்க வேண்டும், என்ற எண்ணம் நமக்குள் எழ வேண்டும். பெற்றோர்கள் நம் இரு கண்கள். நம் கண்களை நாம்தான் பாதுகாக்க வேண்டும். அதை பிடுங்கி எறிய முடியுமா?. பெற்றோர்கள் நமது வாழ்க்கையின் வழிகாட்டிகள்.

    அவர்கள் நம்மை பெற்றெடுக்கவில்லையென்றால் நாம் இந்த மண்ணில் பிறந்திருக்க முடியாது. ஒருநல்ல நிலையை அடைந்திருக்க முடியாது. ஆகவே, நாம் அனைவரும் படித்து முடித்து நல்லதொரு வேலைக்கு சென்றதும் நமது பெற்றோரை கைவிடாமல் கடைசி வரை வைத்து காப்பாற்ற வேண்டும்.
    Next Story
    ×