search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தை பிறந்ததும் வேலையை இழக்கும் பெண்கள்
    X

    குழந்தை பிறந்ததும் வேலையை இழக்கும் பெண்கள்

    குழந்தைகள் பராமரிப்பு என்று வரும்போது நிச்சயம் குழந்தைக்குதான் முதலிடம் தர வேண்டியுள்ளது. எவ்வளவு பெரிய வேலையாக இருந்தாலும் கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
    பெண்கள் இல்லத்தரசிகளாக மட்டும் இருந்த காலம் மாறி, இப்போது பல வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார்கள். எல்லோரும் படிக்கிறார்கள். வேலைக்கும் போகிறார்கள். ஆனால் திருமணத்திற்கு பின்னர் வீடா.. அலுவலகமா? என்ற கேள்வி எழும்போது வீட்டிற்கு தான் முதலிடம் அளிக்கவேண்டியிருக்கிறது.

    குழந்தை பிறந்த பிறகு பெரும்பாலான பெண்கள் பார்க்கும் வேலையை மறுபரிசீலனை செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். குழந்தைகள் பராமரிப்பு என்று வரும்போது நிச்சயம் குழந்தைக்குதான் முதலிடம் தர வேண்டியுள்ளது. எவ்வளவு பெரிய வேலையாக இருந்தாலும் கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

    அதுவரை இருவர் சம்பாத்தியத்தில் நடந்து கொண்டிருந்த குடும்பம் பின்பு ஒருவரின் சம்பாத்தியத்தை மட்டுமே நம்பி வாழும் நிலையை எதிர்கொள்ள நேரும். குழந்தை பராமரிப்பு செலவுகள் வேறு கையை பிசைய வைக்கும். அப்போது வேலையை விட்டுவிடுவதா? வேண்டாமா? என்ற சிந்தனையும் மனதுக்குள் எட்டிப்பார்க்கும். குழந்தையா? வேலையா? என இருதலைக்கொள்ளி எறும்பாக தவிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதுபற்றி தேசிய நிறுவனம் ஒன்று இந்திய அளவில் ஆய்வு மேற்கொண்டது. அதில் ‘திருமணத்திற்கு பின் 45 சதவீத பெண்கள் வேலையை விட்டு விடுகிறார்கள். பெரிய அளவில் சம்பாதித்த நடிகைகள்கூட பணியிலிருந்து விலகிக் கொள்கிறார்கள். இது அவர்கள் தார்மீகமாக எடுக்கும் முடிவு’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    திருமணத்திற்கு தயாராகும் இளைஞர்கள் படித்த, வேலைக்கு போகும் பெண் வேண்டும் என்று விரும்புகிறார்கள். வேலைக்குப் போகும் பெண்ணுக்கு சமூக அந்தஸ்து கிடைக்கும், அவள் வாங்கும் சம்பளம் குடும்பத்திற்கு உபகாரமாகவும் இருக்கும் என்பது அவர்கள் கருத்து. இந்த உபகாரம் எதுவரை நீடிக்கும் என்பதுதான் கேள்விக்குறி. மணமான சில மாதங்களிலேயே குழந்தை பற்றிய எதிர்பார்ப்பு வீட்டு பெரியவர்களிடம் உருவாகிறது. இரண்டாண்டு கழித்தும் குழந்தை பாக்கியம் இல்லை என்றால் அந்த பெண்ணின் நிம்மதியை கெடுத்துவிடுவார்கள். வேலைக்கு போகும் அவள் மனதில் குழந்தை பற்றிய எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கும்.



    குழந்தையின் வரவு மகிழ்ச்சியாக இருந்தாலும், அதனை வளர்த்து ஆளாக்குவதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். வீட்டில் எத்தனை பேர் இருந்தாலும் குழந்தை பராமரிப்பில் முக்கிய பங்கு அம்மாவிற்கு போய் சேருகிறது. அந்த சூழ்நிலையில் வேலைக்கு செல்லும் பெண்கள் உத்தியோகத்தை விட்டுவிட வேண்டியுள்ளது. இது குடும்பத்தின் நிதி நிலைமையை பாதிக்கும் விஷயமாக மாறிவிடுகிறது.

    இப்போது பல நிறுவனங்கள், பெண்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதியளிக்கிறது. அது பெண்களுக்கு நிம்மதியையும் தேடி கொடுக்கிறது. குழந்தையை பராமரித்து கொண்டே பணிகளையும் செய்வதற்கு தங்களை பழக்கப்படுத்திக்கொள்கிறார்கள். வெளிநாடுகளில் குழந்தை காப்பகங்களில் குழந்தையை பராமரிப்பதற்கு அதிக பணம் செலுத்த வேண்டியிருப்பதால் அங்கு பெண்கள் வேலையை விட்டுவிட்டு குழந்தைகளை உடனிருந்து பார்த்துக்கொள்கிறார்கள். குழந்தையின் சிறுவயது குறும்புகளை பக்கத்தில் இருந்து ரசிக்கும் சந்தோஷமாவது கிடைக்கிறதே என்று ஆறுதல் தேடிக்கொள்கிறார்கள்.

    அதனால் பெண்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள், அங்கேயே காப்பகங்களையும் நிர்வகித்து, பெண்களுக்கு ஆதரவு அளிக்கிறார்கள். குழந்தையை பக்கத்திலேயே வைத்துக்கொண்டு வேலை பார்ப்பது அவர்களுக்கு நிம்மதி தருகிறது. டென்ஷன் இல்லாமல் வேலையை சுமுகமாக முடிக்கிறார்கள்.

    ஒரு குடும்பத்தை உருவாக்குவதிலும், நிர்வகிப்பதிலும் பெண்களின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இடையே அலுவலகம் குறுக்கிடும்போது குடும்பத்தை வழிநடத்துவதில் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடு கிறது. மனோரீதியாக அம்மா உடனிருக்கும் போதுதான் குழந்தைகள் முழு பாதுகாப்பை உணருகின்றன. அது அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதோடு, பாதுகாப்பாக வளரவும் உதவுகிறது. அதனால் பெண்கள், குழந்தைகளுடன் இருக்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.



    ஆண்களுக்கு இணையாக படிக்கும் பெண்கள் அவர் களுக்கு இணையாக வேலை செய்யவும், ஊதியம் பெறவும் தகுதி வாய்ந்தவர்களாகிறார்கள். ஆனால் குடும்ப பாரத்தால் வேலையை விட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். திருமணத்திற்கு பின்னர் குழந்தை வளர்ப்புக்காக இப்படியொரு சிக்கலான முடிவெடுக்க வேண்டிய நிலை வரும் என்பதை பெண்கள் அறிந்து முதலிலேயே தெள்ளத்தெளிவாக சிந்திக்க வேண்டும்.

    குழந்தை வளர்ப்பிற்காக வேலைக்கு இடைவெளி விடும் பட்சத்தில் வரவு-செலவுகளை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். ஆரம்பகாலத்தில் இருவரும் சம்பாதிக்கிறோம் என்று பட்ஜெட் போட்டு, கடன் வாங்கி வசதி வாய்ப்புகளை பெருக்கிக்கொண்டு பின்னர் இ.எம்.ஐ. கட்டிக்கொண்டிருக்கும் நிலையில் இருந்தால் வேலையை சட்டென்று விட்டுவிட முடியாது.

    ஆதலால் திருமணமான புதிதிலேயே பெண்கள் வேலைக்கு சென்றாலும் கணவரின் வருமானத்திற்குள் செலவுகளை கட்டுப்படுத்திக்கொள்ள பழகவேண்டும். தன்னுடைய வருமானம் இல்லாவிட்டாலும் குடும்பத்தை நிர்வகிக்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இருவர் சம்பாத்தியத்தில் தாராளமாக செலவு செய்து பழகிவிட்டு, திடீரென்று வேலையை விடுவதென்றால் தயக்கமாக இருக்கும். அதுவும் குழந்தைக்கென்று ஒரு பெரிய தொகையை மாதந்தோறும் கண்டிப்பாக செலவு செய்ய வேண்டிய நிலையில் வேலையை விடுவது தடுமாற்றமாக இருக்கும்.

    குழந்தை பிறந்த காலகட்டத்தில் வீட்டிலிருந்தே வருமானத்தை பெருக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும். குழந்தை கொஞ்சம் வளர்ந்ததும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து விட்டு மீண்டும் வேலைக்கு செல்ல தொடங்கலாம். நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்கு அதிகம். பெண்கள் கொடுத்த பணியை நேர்மையாக செய்யக் கூடியவர்கள் என்ற கருத்து பரவலாக இருக்கிறது. அந்த உழைப்பை பெண்கள் வழங்க தயாராக வேண்டும்.
    Next Story
    ×