search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தை தேரோட்ட திருவிழா கொடியேற்றம் நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தை தேரோட்ட திருவிழா கொடியேற்றம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    ஸ்ரீரங்கம் கோவிலில் தை தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முக்கிய விழாக்களில் ஒன்றான தை தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் தை தேரோட்ட திருவிழாவும் ஒன்று. இவ்விழா 11 நாட்கள் கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான தை தேரோட்ட விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 3.45 மணிக்கு கொடியேற்ற மண்டபம் வந்தார்.

    பின்னர் கொடிப்படம் புறப்பட்டு வந்து காலை 6 மணிக்கு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் காலை 7 மணிக்கு நம்பெருமாள் கொடியேற்ற மண்டபத்தில் இருந்து புறப்பட்டு கண்ணாடி அறையை சென்றடைந்தார். நம்பெருமாள் உப நாச்சியார்களுடன் மாலை 6.30 மணிக்கு திருச்சிவிகையில் புறப்பட்டு உள் திருவீதிகளான 4 உத்திரை வீதிகளிலும் வலம் வந்து சந்தனு மண்டபம் வந்தடைந்தார். அங்கிருந்து புறப்பட்டு யாகசாலையில் திருமஞ்சனம் கண்டருளிய பின்னர் இரவு 1 மணிக்கு கண்ணாடி அறை சென்றடைந்தார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 30-ந் தேதி காலை நடைபெறுகிறது. அன்று நம்பெருமாள் உப நாச்சியார்களுடன் அதிகாலை 3.45 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு தைத்தேர் மண்டபத்திற்கு 4.30 மணிக்கு வருகிறார். அங்கு 4.30 மணி முதல் 5.15 மணி வரை ரதரோஹணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உப நாச்சியார்களுடன் எழுந்தருளிய பின் காலை 6 மணிக்கு தேர் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது. தேர் நான்கு உத்திரை வீதிகளில் வலம் வந்து பின்னர் நிலையை அடைகிறது.

    31-ந் தேதி சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடக்கிறது. நிறைவுநாளான பிப்ரவரி 1-ந் தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி உள்வீதிகளில் வலம் வருகிறார்.
    Next Story
    ×