search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத்தேர் திருவிழாவையொட்டி தைத்தேரில் முகூர்த்தக்கால் நடப்பட்டபோது எடுத்த படம்.
    X
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத்தேர் திருவிழாவையொட்டி தைத்தேரில் முகூர்த்தக்கால் நடப்பட்டபோது எடுத்த படம்.

    ஸ்ரீரங்கம் கோவிலில் தைத்தேர் திருவிழா முகூர்த்தக்கால் நடப்பட்டது

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பூபதித்திருநாள் எனப்படும் தைத்தேர் திருவிழாவிற்காக தேரில் முகூர்த்தக்கால் நடப்பட்டது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பூபதித்திருநாள் எனப்படும் தைத்தேர் திருவிழா நடைபெற உள்ளது. திருவிழாவின் முதல் நாளான வருகிற 22-ந் தேதி காலை 5.15 மணி முதல் 6 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது. இதையடுத்து பிப்ரவரி மாதம் 1-ந் தேதி வரை 11 நாட்கள் திருவிழா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 30-ந் தேதி நடைபெறுகிறது.

    திருவிழாவை முன்னிட்டு தெற்கு உத்திரை வீதியில் உள்ள தைத்தேரில் முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று மாலை நடைபெற்றது. அப்போது முகூர்த்தக்காலின் நுனியில் சந்தனம், மாவிலை, பூமாலை உள்ளிட்ட மங்களப்பொருட்கள் அணிவிக்கப்பட்டு மந்திரங்கள் ஓதி புனிதநீர் தெளிக்கப்பட்டது. பின்னர் முகூர்த்தக்காலை கோவில் அறங்காவலர்கள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தேரில் நட்டனர்.

    தைத்தேரோட்ட திருவிழாவையொட்டி தினமும் காலையும், மாலையும் வெவ்வேறு வாகனங்களில் நம்பெருமாள் உத்திரை வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். விழாவின் இரண்டாம் நாளான 23-ந் தேதி காலை நம்பெருமாள் ஒற்றை பிரபை வாகனத்திலும், மாலை ஹம்ச வாகனத்திலும் வீதியுலா வருகிறார்.

    24-ந் தேதி காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும், 25-ந் தேதி காலை இரட்டை பிரபை வாகனத்திலும், மாலை கருட வாகனத்திலும், 26-ந் தேதி காலை சேஷ வாகனத்திலும், மாலை ஹனுமந்த வாகனத்திலும், 27-ந் தேதி காலை கற்பக விருட்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் வீதியுலா வருகிறார். 28-ந் தேதி நெல் அளவை கண்டருளுகிறார். 29-ந் தேதி மாலை குதிரை வாகனத்தில் நம்பெருமாள் வையாளி கண்டருளுகிறார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 30-ந் தேதி காலை நடைபெறுகிறது. அன்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அதிகாலை 3.45 மணிக்கு கண்ணாடி அறையில் இருந்து புறப்பட்டு தைத்தேர் மண்டபத்திற்கு 4.30 மணிக்கு வருகிறார். 4.30 மணி முதல் 5.15 மணிவரை மகர லக்னத்தில் ரதரோஹணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின் காலை 6 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. தேர் நான்கு உத்திரை வீதிகளில் வலம் வந்து பின்னர் நிலையை அடைகிறது.

    31-ந் தேதி சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடக்கிறது. நிறைவு நாளான பிப்ரவரி 1-ந் தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி உள்வீதிகளில் வலம் வருகிறார். 
    Next Story
    ×