search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை சூரசம்ஹாரம்
    X

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை சூரசம்ஹாரம்

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை(புதன்கிழமை) நடக்கிறது.
    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 20-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 4-ம் நாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலையில் மூலவருக்கு உச்சிகால அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.

    மதியம் சுவாமி ஜெயந்திநாதர்-வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, வேல்வகுப்பு, வீரவாள்வகுப்பு பாடல்களுடனும், மேள வாத்தியங்களுடனும் சண்முகவிலாச மண்டபம் சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

    மாலையில் சுவாமி ஜெயந்திநாதர்-வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. இரவில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி, கிரிவீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



    கந்தசஷ்டி திருவிழா தொடங்கிய நாளில் இருந்து கோவில் வளாகத்தில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கியிருந்து, விரதம் இருந்து வருகின்றனர். பக்தர்கள் குழுக்களாக அமர்ந்து, முருக பெருமானின் திருப்புகழை பாடி வழிபடுகின்றனர். கோவில் வளாகத்தில் உள்ள சிங்கப்பூர் கோவிந்தசாமிபிள்ளை கலையரங்கில் காலை முதல் இரவு வரையிலும் தொடர் பக்தி சொற்பொழிவு நடக்கிறது. தன்னார்வலர்கள் பக்தர்களுக்கு பால், பழம், பானகரம் போன்றவற்றை வழங்கி வருகின்றனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6-ம் திருநாளான நாளை(புதன்கிழமை) மாலையில் நடக்கிறது. இதனை முன்னிட்டு அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. மதியம் 12 மணி அளவில் யாகசாலையில் தீபாராதனைக்கு பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளுகிறார்.

    அங்கு தீபாராதனைக்கு பின்னர் சுவாமி திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளுகிறார். கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது.



    பின்னர் சந்தோஷ மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி- அம்பாள் கிரிப்பிரகார உலா வந்து கோவில் சேர்கிறார்கள். இரவில் 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயாபிஷேகம் (கண்ணாடியில் தெரியும் சுவாமியின் பிம்பத்துக்கு அபிஷேகம்) நடைபெற்று, சஷ்டி பூஜை தகடுகள் கட்டுதல் நடைபெறும்.

    7-ம் திருநாளான நாளை மறுநாள்(வியாழக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூபம், உதய மார்த்தாண்ட அபிஷேகம், மற்ற காலபூஜைகள் நடைபெறும். அதிகாலை 5 மணிக்கு தெய்வானை அம்பாள் தபசு காட்சிக்கு எழுந்தருளுகிறார். மாலை 6.30 மணிக்கு சுவாமி- அம்பாள் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 11.45 மணிக்கு சுவாமி-தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது.

    விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் மேற்பார்வையில், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தீபு தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் பாரதி, உதவி ஆணையர் ராமசாமி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×