search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்
    X

    கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

    இருபத்தேழு நட்சத்திரங்களில் மூன்றாவது இடத்தை பெறுவது கிருத்திகை நட்சத்திரமாகும். இன்று கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியத்தை தெரிந்து கொள்ளலாம்.
    இருபத்தேழு நட்சத்திரங்களில் மூன்றாவது இடத்தை பெறுவது கிருத்திகை நட்சத்திரமாகும். இதன் அதிபதி சூரிய பகவானாவார் கிருத்திகை நட்சத்திரத்தின் 1-ம் பாதம் மேஷ ராசியிலும் 2,3,4 பாதங்கள் ரிஷப ராசியிலும் இருக்கும். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது.

    இது உடலில் 1-ம் பாதமானது தலை மற்றும் கண்களையும், 2,3,4-ம் பாதங்கள் முகம், கழுத்து, தாடை போன்ற பாகங்களையும் ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் அ,இ,உ,எ ஆகியவை தொடர் எழுத்துக்கள் ஆ,ஈ ஆகியவை.

    குண அமைப்பு:


    கிருத்திகை நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்களில் பிறந்தவர்களுக்கு தோஷமில்லை. மற்ற இரண்டு பாதங்களில் பிறந்தவர்கள் வாழ்வில் சில இடையூறுகளை சந்திக்க வேண்டியிருக்கும். இவர்களுக்கு நல்ல உடல் வலிமையும் புத்திசாலிதனமும் இருக்கும். குருட்டு தைரியத்துடன் சிலருக்கு தீயதை செய்தாலும் மென்மையான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

    சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றலும், எதையும் வெளிப்படையாக பேசும் குணமும் உண்டு. முன் கோபமும் அதிகமிருக்கும் ஆடம்பரமில்லாத வாழ்க்கையை வாழ விரும்புவர். தன் சக்திக்கு எது முடியுமோ அதையே செய்து முடிப்பர். கனவுலகத்தில் சஞ்சரிப்பதெல்லாம் இவர்களுக்கு பிடிக்காத விஷயம். தாய் மொழி மீதும், நாட்டின் மீதும் அதீத பற்றுடையவர்கள். சிரித்த முகத்துடன் இருந்தாலும் சண்டை பிரியர்கள். காரசாரமாக வாதிடுவார்கள்.

    குடும்பம்:

    கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காதல் என்பது பிடிக்காத ஒரு விஷயமாகும். திருமண வாழ்கையிலேயே கறாராக நடந்து கொள்வார்கள். மனைவி பிள்ளைகளிடம் கூட விட்டு கொடுத்து போக மாட்டார்கள் என்றாலும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதுடன் பல கனவுகளுடன் பிள்ளைகளை வளர்ப்பார்கள். அதீதமான தெய்வ பக்தியும் உண்டு. தனக்கென ஒரு பாதையை அமைத்துக் கொண்டு தனி வாழ்க்கையை வாழ்வார்கள் உணவு வகைகளை ரசித்தும் ருசித்தும் உண்பார்கள்.

    தொழில்:

    கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறரை வழி நடத்தி செல்வதில் வல்லவர்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்த பலர் சிறந்த வழிக்கறிஞர்களாகவும், பள்ளி ஆசிரியர்களாகவும், கல்லூரி பேராசிரியர்களாளும் பணியாற்றும் திறன் கொண்டவர்கள். மருத்துவ துறையிலும் சமூக சேவையிலும், நாட்டுக்காவும் பாடுபடுவதில் அக்கரை கொண்டவர்களாகளும் இருப்பார்கள் முழு சுதந்திரம் உள்ள இடத்தில் மட்டுமே பணி புரியும் ஆர்வம் இருக்கும்.

    மற்றவர்களின் கட்டளைக்கு கீழ் படியக்கூடிய வேலையாக இருந்தால் அதனால் எவ்வளவு லாபம் வந்தாலும் ஒரு நிமிடத்தில் உதறி விடுவார்கள். உணவு, மற்றும் கெமிக்கல் போன்ற பேற்றிலும் ஈடுபடுவார்கள் கராத்தே, குங்-கும பூ போன்ற தற்காப்பு கலைகளிலும் சாரணர் இயக்கத்திலும் பங்கேற்கும் ஆர்வம் கொண்டவர்கள். நாளைக்கு செய்வோம் என்று எதையும் தள்ளி போடாமல் அந்தந்த காரியத்தை அவ்வப்போது செய்து முடிப்பார்கள்.

    நோய்கள்:

    கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முன் கோபம் அதிகமிருப்பதால் ரத்த அழுத்த சம்மந்தப்பட்ட நோய்கள் தாக்கும். இதய நோய், ஒற்றை தலைவலி உஷ்ண சம்மந்தப்பட்ட நோய்கள், கண்களில் கோளாறு காதுவலி போன்றவை உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும்.



    திசைப் பலன்கள் :

    கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக சூரிய திசை வரும். சூரிய திசை மொத்தம் 6 வருடங்கள் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள திசை காலங்களை அறியலாம். சூரிய திசை காலங்களில் பல வகையில் குடும்பத்திற்கு முன்னேற்றம் உண்டாகும் என்றாலும் குழந்தைக்கு உஷ்ண சம்மந்தப்பட்ட நோய்களும், குழந்தையின் தந்தைக்கு பல இன்னல்களும் உண்டாகும். சூரியன் பலம் பெற்று சுபர் பார்வையுடனிருந்தால் பாதிப்புகள் குறையும்.

    இரண்டாவது திசையாக வரும் சந்திர திசை மொத்தம் பத்து வருடங்கள் நடைபெறும். சந்திரன் சூரியன் சாரத்தில் சஞ்சரிப்பதால் சற்று முன் கோபம், முரட்டுதனம், தந்தை தாயுடன் கருத்து வேறு ஜல தொடர்புடைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றாலும் சுபர் பார்வை சேர்க்கையுடன் சந்திரனிருந்தால் குடும்பத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

    மூன்றாவது திசையாக வரும் செவ்வாய் திசை 7 வருடங்கள் நடை பெறும். இத்திசை காலங்களில் கல்வியில் முன்னேற்றமும் குடும் பத்தில் ஏற்ற இறக்கமான பலன்களும் உண்டாகும் என்றாலும் ஜாதகருக்கு முன் கோபம் சற்று அதிகமாக இருக்கும்.

    ராகு திசை 18 வருடங்கள் 4-வது திசையாக நடைபெறுவதால் நல்ல யோகத்தையும் வாழ்வில் முன்னேற்றத்தையும் கொடுக்கும். ஜந்தவதாக வரும் குரு திசை காலங்களும் ஒரளவுக்கு ஏற்றத்தை ஏற்படுத்தும். ஆறாவதாக வரும் சனி திசையும் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும் மேற்கூறிய திசா காலங்களில் அதன் அதிபதி ஆட்சி உச்சம் பெற்று கேந்திர திரிகோணங்களில் அமைந்திருந்தால் மட்டுமே நற்பலனை பெற முடியும். இல்லையெனில் வாழ்வில் எதிலும் எதிர் நீச்சல் போட வேண்டிவரும்.

    இந்த நட்சத்திரத்தை மார்கழி மாதத்தில் இரவு சுமார் 11.00 மணிக்கு உச்ச வானத்தில் காணலாம். கிருத்திகை நட்சத்திர காரர்களின் தல விருச்சம் அத்தி மரமாகும். இம்மரத்தை வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும்.

    செய்ய வேண்டிய நற்காரியங்கள் :

    கடன்களை பைசல் செய்ய, சிலம் பாட்டம் பயில சுரங்கம் வெட்ட, செங்கல் சூளைக்கு நெருப்பிட துப்பாக்கி சுடும் பயிற்சி மேற் கொள்ள பழைய வாகனங்களை விற்க இந்த நட்சத்திர நாள் நல்லது.

    வழிபாட்டு ஸ்தலங்கள் :

    திண்டிவனம் அருகிலுள்ள மயிலம் முருகனை வியாக்கிழமைகளில் வணங்குவது நல்லது. பொதுவாகவே முருகன் குடிகொண்டிருக்கும் எல்லா ஸ்தலங்களையும் வழிபடலாம்.

    கிருத்திகை நட்சத்திரத்திற்கு பொருந்தாத நட்சத்திரங்கள் :

    புனர்பூசம், உத்திரம் விசாகம், உத்திராடம், பூரட்டாதி போன்ற நட்சத் திரங்கள் ரச்சு பொருத்தம் வராது என்பதால் இந்த நட்சத்திர காரர்களை திருமணம் செய்வதை தவிர்ப்பது நல்லது.
    Next Story
    ×