search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கும்பகோணம் சூரியனார் கோவில்
    X

    கும்பகோணம் சூரியனார் கோவில்

    கும்பகோணம் அருகிலுள்ள சூரியனார் கோவில்தான் இந்தியாவில் சூரியனுக்காக கட்டப்பட்டு இன்றும் பழுதுபடாத நிலையிலுள்ள கோவில் ஆகும்.
    கும்பகோணம் அருகிலுள்ள சூரியனார் கோவில்தான் இந்தியாவில் சூரியனுக்காக கட்டப்பட்டு இன்றும் பழுதுபடாத நிலையிலுள்ள கோவில் ஆகும். திருவாவடுதுறை மடம் கீழ் உள்ள இக்கோவிலில் வழிபாடும் திருவிழாக்களும் மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகின்றன.

    தை மாதம் பொங்கல் திருவிழாவையட்டி சூரியனார் கோவிலில் நடைபெறும் திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கும். பத்து நாட்கள் நடைபெறும். இவ்விழாவில் சூரியனாரின் திருமணப் பெருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.

    சூரிய பகவான் பார்வை அளிக்கும் தெய்வமாக கருதப்படுகிறார். ஆகையால் பார்வை குன்றியர்களும், கண்நோய் உடையவர்களும் இங்கு வந்து வழிப்பட்டு பலன் பெறுகிறார்கள். அது மட்டுமல்ல முழு முதல் கடவுளாக சூரியன் இங்கே கருவறையில் அருள் பாலிக்க இது ஒரு நவக்கிரகக் கோவிலாக மலர்ந்துள்ளது.

    சூரியனை சுற்றியுள்ள மற்ற எட்டு கிரகங்களான சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் (வெள்ளி) சனி, ராகு, கேது என்னும் இரு பாம்புகள் ஆகிய கிரகங்கள் சூரியனார் கோவில் வளாகத்தில் சுற்றாலயங்களாக அமைக்கப்பட்டுள்ளன. சூரியன் எதிரே உள்ள மண்டபத்தில் குதிரை நிற்கிறது. பிரகஸ்பதி என்று அழைக்கப்படும் குரு தனியாக சன்னதியில் இல்லாமல் சூரியனின் எதிரில் குதிரை வாகனத்தின் பின் நிற்கிறார்.

    சுக்கிரதிசை, குரு திசை, சனி திசை, ராகு திசை, கேது திசை போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், அந்த தோஷம் நீங்க அந்தந்த தெய்வங்களை வேண்டி விரதம் மேற்கொண்டு இங்கு வந்து வழிபடுகின்றனர். 

    தமிழ்நாட்டில் நவக்கிரகங்களுக்கு என்று 9 ஆலயங்கள் தனித்தனியாக உள்ளன. அங்கு மக்கள் சென்று வணங்குகின்றனர். ஆயினும் அத்தனை தலங்களையும் வழிபட்ட பயன் சூரியனார் கோவிலுக்கு சென்று-வணங்கினாலே கிடைக்கிறது.

    கர்ப்பக்கிரகத்தில் சூரிய பகவான் நின்ற கோலத்தில் இரண்டு கரங்களுடன் திகழ்கிறார் அவற்றில் தாமரை மலரை ஏந்தி நிற்கிறார். உஷா, சாயா (பிரத்யுஷா) என்ற இரு தேவியார் சூரிய பகவானின் இரு பக்கங்களிலும் நிற்கின்றனர். 

    திருவிழாக் காலங்களில், உஷாதேவி, சாயாதேவி இருவரும் சூரியனின் இருபுறமும் எழுந்தருளி சிறப்பாக பவனி வரும் காட்சி மிகவும் அற்புதமாக இருக்கும். இங்கு பள்ளியறை நாச்சியாராகத் திகழ்பவள் சாயாதேவியே. உஷாதேவி-காலை உதிப்பவள் எனவே அவள் பள்ளியறை நாச்சியாக இடம் பெறவில்லை.

    சூரியனார் கோவிலை கி.பி. 1110-ம் ஆண்டு முதலாம் குலோத்துங்க சோழன் கட்டினான். 

    எப்படி செல்வது?

    தஞ்சை மாவட்டம் திருவி டைமருதூர் வட்டத்தில் காவிரி ஆற்றின் வடகரையில் ஆடுதுறைக்கு தெற்கில் 2 கி.மீ. தூரத்தில் சூரியனார் கோவில் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்தும், மயிலாடுதுறையிலிருந்தும், ஆடுதுறையிலிருந்தும், அணைக்கரை - திருப்பனந்தாளிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.-பேருந்தில் வருவோர் திருமங்கலக்குடி காளியம்மன் கோயில் பேருந்து நிற்கும் இடத்தில் இறங்கி வடகிழக்கே 2 பர்லாங்தூரம் நடந்து வந்தால் சூரியனார் கோவிலை அடையலாம். 
    Next Story
    ×