search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவில்
    X

    திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவில்

    திருவேற்காட்டில் சுமார் 2,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பாலாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.
    திருவேற்காடு என்றவுடன் தேவி கருமாரி அம்மன் கோயில்தான் நினைவுக்குவரும். அதே திருவேற்காட்டில் பாலாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இது சுமார் 2,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது.

    63 நாயன்மார்களில் ஒருவரான மூர்க்க நாயனார் அவதரித்த மண். இத்தல முருகப்பெருமான், அருணகிரிநாதரின் 'திருப்புகழ்' பாடல் பெற்றவர். தொண்டை மண்டலத் தேவாரத் திருக்கொயில்களில் 23 வது கோயிலாகத் திகழ்கிறது. 12 பாடல்களால் திருஞான சம்பந்தர் பாடித் துதித்த திருவிடம்; சேக்கிழார் போற்றிய திருத்தலம் எனப் பல சிறப்புகளைக்கொண்டது இந்த வேதபுரீஸ்வரர் கோயில்.

    நான்கு வேதங்களும் வேல மரங்களாக மாறி நின்று ஈசனை வழிபட்டக் காரணத்தால், வேற்காடு (வேல் காடு) என்று பெயர் பெற்றது. தேவி கருமாரி அம்மன் கோயிலிலிருந்து தென்மேற்கே சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கி இருக்கும் கோயிலுக்கு முன்பாகப் புதுபிக்கப்பட்டிருக்கும் திருக்குளம்.

    ஐந்து நிலை ராஜகோபுரத்தைத் தரிசித்து உள்ளே நுழைந்தால், உயர்ந்து விரிந்த கூரை ரம்மியத்தைக் கொடுக்கிறது. பீடத்துடன் தங்கமுலாம் பூசப்பட்ட கொடிமரம் கைகூப்பி வணங்கச் செய்கிறது. கருவறையை நோக்கி இருக்கும் நந்தி சிறிதாக- அழகாக அமைக்கப்பட்டுள்ளது. பிரதோஷத் தினத்தில் நந்தி அபிஷேகம் காண பக்தர்கள் பெருமளவில் கூடுவார்கள்.

    சிவலிங்கத்தின் பின்னால் கிழக்கு நோக்கி ஈசனும் அம்பாளும் திருமணக்கோலத்தில் அகத்திய முனிவருக்குத் திருக்காட்சி கொடுக்கும் தரிசனம் காண கண் கோடி வேண்டும். பக்தர்கள் அனைவரும் கருவறை வாயில்வரை அர்த்த மண்டபத்தில் நின்று இறைவனைத் தரிசிப்பது மெய்சிலிர்க்க வைக்கிறது.

    இங்கு வந்து வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும். சிவன் பார்வதியுடன் கணபதி எழுந்தருளிய சந்நிதி உள்ளது. மூலவரின் கருவறை விமானம் யானையின் பின்புறத் தோற்றம் (கஜபிருஷ்டம்) கொண்டது.



    சந்திரர், சூரியர், தாமரை வடிவில் நவகிரகங்கள் உள்ளனர். பிராகாரத்தின் தென்புறத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, பிள்ளையாரைத் தனித் தனியாகத் தரிசிக்கலாம். சைவக் குரவர்கள் நால்வர், 63 நாயன்மார்கள் வரிசையாக எழுந்தருளியிருப்பது பரவசத்தைத் தருகிறது. மேற்குப் புறத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அநபாய சோழன், சேக்கிழார், வடக்கே சண்டிகேஸ்வரர், நின்ற கோலத்தில் பிரம்ம தேவன், துர்க்கை முதலிய தெய்வங்களும் எழுந்தருளி இருக்கின்றனர்.

    கருவறையின் பின்புறத்தில் லிங்கோத்பவர் அருள்புரிகிறார். மாத சிவராத்திரி நாள்களில் மாலை வேளையில் அவருக்கு 5 நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் வாழ்க்கை இனிதாகும். கல்வி, ஞானம், செல்வம், இறையருள் கிட்டும்.

    பாலாம்பிகை தெற்கு நோக்கியபடி தனிச் சந்நிதியில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். அருகில் நடராஜர், சிவகாமி அம்பாள் உள்ளனர். அம்பிகை சந்நிதி அருகில் பைரவர் உள்ளார். இவரை சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டுவந்தால் அஷ்டமச் சனி, ஏழரைச் சனி, 'அர்த்தாஷ்டமச் சனி' பாதிப்புகள் விலகும்.

    சனீஸ்வரருக்குத் தனிச் சந்நிதி பெரிதாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அருணகிரிநாதர், மூர்க்க நாயனாருக்கும் தனிச் சந்நிதிகள் உள்ளன.

    முருகப் பெருமான், சுப்பிரமணியராகக் காட்சியளிக்கிறார். சூரசம்ஹாரம் முடிந்த பின்னர், சூரபத்மனைக் கொன்ற பாவம் நீங்க வேலால் கிணறு உருவாக்கி (வேலாயுதத் தீர்த்தம்), இத்தலத்தில் உள்ள வேதபுரீஸ்வரரை வழிபட்டார். அந்த 'ஸ்கந்த லிங்கம்' முருகனுக்கு முன்பாகவே வைக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து 9 ஞாயிற்றுக்கிழமைகள் அல்லது கார்த்திகை மாத ஞாயிறு, திங்கள்கிழமைகளில் நீராடி வேதபுரீஸ்வரரை வழிபட்டால் தோல் சம்பந்தமான நோய்கள் அகலும் என்பர். பிராகாரத் தூணில் ஐந்துதலை நாகம் குடைப்பிடிக்க, காலடியிலும் நாகத்துடன் தேவி கருமரியம்மன் வீற்றிருக்கும் சிற்பம் சிறப்பு வாய்ந்தது.
    Next Story
    ×