search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருமண வரம் அருளும் நித்திய கல்யாணப் பெருமாள் கோவில்
    X

    திருமண வரம் அருளும் நித்திய கல்யாணப் பெருமாள் கோவில்

    நித்திய கல்யாணப் பெருமாள் ஆலயத்திற்கு திருமண வரம் வேண்டி வரும் பக்தர்கள், வெகுவிரையில் மணமுடித்து வந்து மீண்டும் இறைவனை வழிபடுவதை இன்றும் கண்கூடாகக் காணலாம்.
    சம்பு தீவில் சரஸ்வதி ஆற்றங்கரையில், குனி எனும் முனிவர் தவமியற்றி வந்தார். அந்த ரிஷிக்கு பணிவிடை செய்ய கன்னிகை ஒருத்தி வந்தாள். அவளது நோக்கம், முனிவரின் தர்மபத்தினியாகி தானும் இறைபதம் அடைய வேண்டும் என்பதாகும். ஆனால் அந்த முனிவரோ முக்தியை நாடி தவம் இயற்றி இறைவனடி சேர்ந்து விட்டார்.

    தன் விருப்பம் நிறைவேறாத அந்தப் பெண், காடு களைச் சுற்றி வந்தான். அவளது உண்மையான விருப்பத்தை அறிந்த காலவ முனிவர், அவளை மணம் புரிந்தார். அவர்களுக்கு முன்னூற்று அறுபது பெண்கள் பிறந்தார்கள். தர்ம பத்தினியாக வாழ்ந்த அந்தப் பெண் பரமபதம் அடைந்தார். இதனால் தன்னுடைய முன்னூற்று அறுபது கன்னிகைகளுக்கும் மணம் முடித்து வைக்க வேண்டிய பெரும் பொறுப்பு காலவ முனிவரை வந்து சேர்ந்தது.

    தன்னுடைய நிலையைக் கூறி, வேதமூர்த்தியாகவும் ஞானப்பிரானாகவும் விளங்கும் ஆதி வராகரை வேண்டினார். வராக மூர்த்தி அவருக்கு காட்சி தந்தார்.

    ‘கவலையுறாதீர்கள் காலவ முனிவரே! நானே நாள்தோறும் பிரம்மச்சாரியாக வந்து தங்களின் கன்னிகைகளை திருமணம் செய்து கொள்கிறேன்’ என்று அருளினார்.

    காலவ முனிவர் தந்தை என்ற முறையில் நிம்மதியானார். அதற்குள் இருக்கும் சூட்சுமத்தை உணர்ந்தார். உலகில் எல்லோரும் ஜீவாத்மாக்கள். இவர்கள் அனைவரும் காலவ முனிவர் போன்ற குருவை துணைகொண்டால் பரமாத்மாவான, பெருமாள் ஆதி வராகரை அடையலாம். இங்கு திருமணம் என்பது புறத்தில் நிகழ்ந்தாலும், அகத்திலே இனி ஒரு ஜென்மம் எடுக்காது, இந்த மாயையிலிருந்து மீட்டு தன்பதம் சேர்த்துக் கொள்வான் என்று பொருளும் உண்டு. வராகர் யக்ஞ மூர்த்தி.

    வேதம் சொல்லும் தர்மங்கள், யாகங்கள் எல்லாவற்றையும் கொண்ட திருமணம் என்ற இல்லற தர்மத்தையும் சொல்லும் தெய்வம். வேதத்தில், திருமண நிகழ்வில் கன்னிகா தானம் மிகமிக முக்கியமானது என்றும் சொல்லப்பட்டுள்ளது. திருமணம் என்பது தெய்வத்தால் நிச்சயிக்கப்படுகிறது எனும் வார்த்தையிலுள்ள சத்தியம் இதுதான். எனவேதான் வராகர் காலவ முனிவரின் முன்னூற்று அறுபது கன்னிகைகளையும் திருமணம் செய்துகொண்டார். முன்னூற்று அறுபத்தோராம் நாள் அனைத்து கன்னிகைகளையும் ஒருவராக்கி அகிலவல்லித் தாயார் எனும் திருநாமம் சூட்டி வராகப் பெருமாள் எழுந்தருளச் செய்தார். காலவ முனிவர் வராகரின் கருணையை எண்ணி கண்ணீர் விட்டார்.

    ‘திருவிடந்தை எனும் இத்தலத்தில் நான் என்றும் நித்திய கல்யாணப் பெருமாளாகவே அருள்புரிவேன்’ என்று பெருமாள் உறுதி கூறினார். இத்தலத்திற்கு ‘நித்தியகல்யாணபுரி’ என்றும் பெயர் உண்டு.



    எந்தை என்றால் எம் தந்தை என்று பொருள். எம் தந்தையாக பெருமாள் திரு என்கிற லட்சுமி தாயாரை இடப் பாகத்தில் கொண்டுள்ளதால் திருவிடவெந்தை எனப் பெயர் பெற்றது. அதுவே திருவிடந்தை என்று மறுவியது. பெரியதுமல்லாது சிறியதுமல்லாது நடுவாந்திரமான கோயில். ஆனால், தொன்மை கீர்த்தியில் ஈடு இணையற்ற தலம். கருவறையில் வராகர் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுகமண்டலத்தோடு சேவை சாதிக்கிறார். இடது காலை மடித்து அந்த மடியில் தாயாரை அமர்த்தி அவரின் காதருகே சரம ஸ்லோகம் எனும் மந்திரத்தை உபதேசிக்கும் கோலம், காணக் கண்கோடி வேண்டும். பெருமாளின் இடது திருவடி ஆதிசேஷன் தம்பதியினரின் சிரசில் படுமாறு அமைந்தது அரிய அமைப்பாகும். இவரை தரிசிப்பவர்களுக்கு ராகுகேது தோஷ நிவர்த்தியும் ஏற்பட்டு விடுகிறது.

    உற்சவர்களான பெருமாள், தாயார் இருவருக்கும் கன்னத்தில் இயற்கையிலேயே திருஷ்டி பொட்டு அமைந்திருக்கிறது. எப்போதும் கல்யாண வீட்டின் குதூகலம் நிரம்பியிருக்கிறது. தனிக்கோயில் கொண்டுள்ள தாயாரின் திருப்பெயர் கோமளவல்லித் தாயார் என்பதாகும். அருளும், அழகும் ஒருசேர வீற்றிருந்து செல்வ வளத்தை பெருக்குவதில் இவளுக்கு நிகர் எவருமில்லை. பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வார் இத்தலத்தை மங்களாசாஸனம் செய்துள்ளார். திருமணத்திற்கான பரிகாரம் இத்தலத்தில் எப்படி நிகழ்த்தப்படுகிறது என்று பார்ப்போம்.

    திருமணமாகாத ஆணோ, பெண்ணோ அருகிலுள்ள கல்யாண தீர்த்தத்தில் குளித்து தேங்காய், பழம், வெற்றிலை, மாலைகளோடு லட்சுமி வராகரை சேவித்து, அர்ச்சனை செய்து கொண்டு அர்ச்சகர் கொடுக்கும் ஒரு மாலையை கழுத்தில் அணிந்து ஒன்பது முறை கோவிலை வலம் வரவேண்டும். திருமணம் முடிந்த பிறகு தம்பதி சமேதராக பழைய மாலையோடு வந்து அர்ச்சனை செய்து வராகரை சேவித்து செல்வது இத்தலத்தின் வழக்கம். பெரும்பாலான பக்தர்களுக்கு அந்த மாலை காயும் முன்பே திருமணம் நிச்சயமாகிவிடுவது சகஜமானது.

    ன்னனுக்கு அருள் செய்த இறைவன் :

    பல்லவ மன்னன் ஒருவன், திருவிடந்தை தலத்தின் மகிமையை அறிந்தான். இதையடுத்து ‘தினமும் ஒரு பெண்ணுக்கு இத்தலத்தில் திருமணம் செய்து வைப்பேன்’ என்று அறிவித்தான். அதுபோல தினமும் ஒரு தம்பதியாக திருமணம் நடத்தி வைத்தான். ஆனால், ஒருநாள் ஒரு பெண்ணுக்கு வெகுநேரமாகியும் மண மகன் கிடைக்கவில்லை. காத்திருந்து காத்திருந்து நாழிகைகள் கரைந்து கொண்டிருந்தன. ஆனால், அவன் வேண்டுதல் வீணாகவில்லை அதிசுந்தரனாக பேரழகு பொருந்திய மணமகன் வந்தான். மணம் செய்து கொண்டான்.

    அந்த மணமகன் மன்னனை நோக்கி, ‘மன்னா என்னைப் பார்’ என்று சொல்லி, வராகராக காட்சி தந்து மறைந்தான்.

    இதையடுத்து பல்லவ மன்னன் மூலவரே வராக மூர்த்தியாக அமையும் படியாக ஆலயம் எழுப்பினான். இந்த ஆலயத்திற்கு திருமண வரம் வேண்டி வரும் பக்தர்கள், வெகுவிரையில் மணமுடித்து வந்து மீண்டும் இறைவனை வழிபடுவதை இன்றும் கண்கூடாகக் காணலாம்.

    சென்னை- மாமல்லபுரம் பாதையில் 42 கி.மீ. தொலைவிலும், மாமல்லபுரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது திருவிடந்தை.
    Next Story
    ×