search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பாவங்களைப் போக்கும் பாபாங்குசா ஏகாதசி விரதம்
    X

    பாவங்களைப் போக்கும் பாபாங்குசா ஏகாதசி விரதம்

    ஐப்பசி வளர்பிறையில் வரும் ஏகாதசி பாபாங்குசா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. பாபாங்குசா ஏகாதசியானது, நம்முடைய பாவங்களை அகற்றும் அங்குசம் போன்றது.
    ஐப்பசி வளர்பிறையில் வரும் ஏகாதசி பாபாங்குசா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. பாபாங்குசா ஏகாதசியானது, நம்முடைய பாவங்களை அகற்றும் அங்குசம் போன்றது. கங்கை முதலிய புண்ணிய தீர்த்தங்கள், யாகங்கள், உயர்ந்த தான- தர்மங்கள் முதலானவற்றால் என்ன பலன் கிடைக்குமோ, அந்த பலன்கள் அனைத்தும் இந்த ஏகாதசி விரதத்தை கடைப்பிடிப்பதால் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், எம பயத்தில் இருந்து விடுபடுவார்கள், நரக வேதனை அவர்களை வாட்டாது என்று புராணங்கள் கூறுகின்றன.

    இந்த விரதத்தை கடைப்பிடிக்கும் வழிமுறைகள் தெரியாமல், விதிப்படி இல்லாமல், ஊரார் மெச்ச வேண்டும் என்பதற்காகவோ அல்லது கபடமாகவோ இந்த விரதத்தைக் கடைப்பிடித்தாலும் கூட பலன் கிடைக்கும். அப்படியானால் முறைப்படி இந்த விரதத்தை கடைப்பிடித்தால் எவ்வளவு சிறப்புகள் வந்து சேரும் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.

    விரதம் இருப்பது எப்படி?

    ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசி அன்று உபவாசம் இருந்து தூய்மையான மனதோடு துளசி தேவியுடன் கூடிய மகாவிஷ்ணுவை பூஜை செய்ய வேண்டும். ஐந்து விதமான பூக்களை அல்லது ஐந்து தாமரை மலர்களை வைத்து சுவாமியை அலங்கரிக்க வேண்டும். ஐந்து விளக்குகளை ஏற்றி வைக்க வேண்டும். ஐந்து வகையான நைவேத்தியங்கள் செய்து வைக்க வேண்டும். பூஜையை முடித்து, துளசியுடன் கூடிய மகாவிஷ்ணுவை வலம் வந்து வணங்க வேண்டும். பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும், ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும் செய்ய வேண்டும்.



    ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசி அன்று தொடங்கிய இந்த விரத பூஜையை ஒரு மாதம் கடைப்பிடிக்க வேண்டும். கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி அன்று இந்த விரத பூஜை நிறைவுபெறும். கார்த்திகை மாத ஏகாதசி அன்று உபவாசம் இருந்து பூஜை செய்ய வேண்டும். அன்று இரவு தூங்காமல் கண் விழித்திருக்க வேண்டியது அவசியம்.

    அந்த நேரத்தில் இறைவனின் நாமத்தை உச்சரித்தபடியே இருக்க வேண்டும். மறுநாள் துவாதசி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி தூய்மையான ஆடைகளை அணிந்து, ஐந்து படி அரிசி மாவில் சர்க்கரையும் பாலும் சேர்த்துப் பிசைந்து, மூன்று உருண்டைகள் செய்ய வேண்டும். அவற்றில் ஒன்றைத் துளசிக்கு நைவேத்தியமாக படைத்து விட்டு, மற்றொன்றை தானமாக கொடுக்க வேண்டும்.

    மூன்றாவது உருண்டையை உரலில் போட்டு, பால் ஊற்றிக் கரும்புகளை கொண்டு இடிக்க வேண்டும். அவ்வாறு இடிக்கும்போது பெண்கள், பக்தி பாடல்களை பாடிக்கொண்டே இடிப்பார்கள். இடிக்கும்போது எத்தனைப் பால் துளிகள் இடிப்பவர்கள் மீது விழுகின்றனவோ, அத்தனை ஆண்டுகள் அந்தப் பெண்கள் சொர்க்கலோகத்தில் வாழ்வார்கள் என்று இந்த விரதமுறை குறித்து கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×