என் மலர்
ஸ்பெஷல்
- ஒரு நல்ல நாவல், அதன் பக்கங்களில் ஆயிரமமாயிரம் சினிமாக்களை பொதிந்து வைத்துள்ளது. நேர்த்தியான அழகுணர்ச்சியை கொண்டுள்ளது.
- உணர்வுகளின் ரகசிய முகமூடிகள் கழன்று விழுந்து, உள்ளுக்குள் நடப்பதை அப்பட்டமாகக் காட்டுகின்றன.
புத்தகம்! மக்களிடையே காட்சி மீது உருவாகியுள்ள ஈர்ப்பு, எழுத்து மீது குறைந்து வருவது குறித்து அனைவரும் ஒரு கட்டத்தில் உணர நேரிடும். கண் முன் கிண்டி வைத்த படத்தை நோகாமல், எந்த மெனக்கிடலும் இல்லாமல் பார்த்துப் பழகியதால் அதிக கவனத்தை கோரும் எழுத்தின் பக்கம் பலர் செல்லாமலேயே இருந்து விடுவது உண்டு.
ஆனால் இரண்டும் வெவ்வேறு வழிகளில் அதனதன் தன்மைகளில் சுவை தருபவை. எழுத்தில் வாசகர்களின் கற்பனைக்கு அதிக இடம் உண்டு. தேடலுக்கு இடம் உண்டு. முழுமையான உணர்வுக்கு இடம் உண்டு. ஆனால் இவ்வின்பங்கள் துய்க்கப்படாமலேயே நம் கண் முன் வீணாவது வேதனையே. ஒரு நல்ல புத்தகம் 100 நண்பர்களுக்கு சமம் என்பதற்கினங்க நம் சிந்தனைக்கு வேலை தரும் புத்தகங்கள் ஏராளம்.
புத்தக வாசிப்பு என்பது ஒரு கடல். அது முழு உலகம், அதன் கதவுகள் என்றும் அகலத் திறந்தே உள்ளன. ஆனால் தயக்கம் பலரை தடுக்கிறது. இந்த சிறு தடையை கடந்து வந்தால் இந்த உலகின் பிரமாண்டங்களையும், ஆச்சர்யங்களையும் காணலாம். மனிதர்களின் மனதின் மிக நுணுக்கமான உணர்ச்சிகளை நாம் புரிந்து கொள்ளலாம்.

ஒரு நல்ல நாவல், அதன் பக்கங்களில் ஆயிரமமாயிரம் சினிமாக்களை பொதிந்து வைத்துள்ளது. நேர்த்தியான அழகுணர்ச்சியை கொண்டுள்ளது. அக சிடுக்குகளை ஆராய்கிறது. இது சினிமாவில் 100 சதவீதம் சாத்தியமாவது அரிதே.
சரி, புத்தம் படிக்கலாம் என்று முடிவெடித்துவிட்டோம், எங்கு?, எப்படி தொடங்குவது? என்று கேட்கிறீர்களா?, உலகம் உருண்டையாக இருப்பதால் அதற்கு தொடக்கப் புள்ளி என்று ஒன்று கிடையாது. அதே போலவே புத்தகங்களும்.
"தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்" என்ற துள்ளாத மனமும் துள்ளும் குட்டியின் பாடலுக்கு இணங்க தேடல், உங்களை உங்கள் வாழ்வையே, வாழ்வு குறித்த உங்கள் பார்வையையே, மாற்றக் கூடிய புத்தகத்துக்கு உங்களை இட்டுச் செல்லலாம்.
இதற்கு ஏற்ற களம் புத்தக கண்காட்சி என கூறலாம். ஒவ்வொரு மாவட்டத்த்திலும் புத்தக கண்காட்சிகள் ஆண்டுதோறும் நடந்து தான் வருகின்றன.
ஒரு சுற்றுலாத் தளத்துக்கு செல்வது போல, திரையரங்குக்கு செல்வது போல அங்கு சென்று, உங்கள் பார்வையை அலைபாய விடுங்கள். அப்படி என்னதான் இருக்கிறது? என்ற கேள்வியை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள். ஒரு அட்டைப்படம் உங்களை ஈர்க்கலாம், ஒரு எழுத்தாளரின் பெயர் உங்களை ஈர்க்கலாம், புத்தம் குறித்து அதன் பின்னட்டையில் கொடுக்கப்பட்டுள்ள அறிமுகம் உங்களை ஈர்க்கலாம்.
பல நேரங்களில் உங்கள் உள்ளுணர்வு இதை படிக்கலாம் என்று நிச்சயம் சொல்லும். வாங்குங்கள். 199 ரூபாய் செலவில் ஒரு 2 மணிநேர சினிமாவை முடித்து வெளியே வந்தால் உங்களிடம் நிறைவு இருக்கலாம், ஆனால் உங்கள் கையில் ஒன்றும் இருக்காது. ஒரு புத்தகம் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுடன் தான் இருக்கும். அதை மீண்டும் மீண்டும் மறு வாசிப்பு செய்யலாம், பிடித்தவர்களுக்கு பரிசளிக்கலாம். உங்களுக்கு புரிகிறது தானே. அவ்வளவு தான் விஷயம்.
புத்தகத்தை வாங்கிவிட்டு படிக்க முடியாமல் போகிறதே என்று கேட்கிறீர்களா?, தயக்கத்தை தூக்கியெறியுங்கள். நிச்சயம் ஒரு நாள் நீங்கள் படித்தே தீர்வீர்கள். இந்த புத்தகம் வாங்கும் விஷயமே வேண்டாம் என நினைக்கிறீர்களா? இருக்கவே இருக்கிறது ஊர்தோறும் நூலகங்கள்.
ஒரு நாள் சுற்றிப் பார்க்கவாவது செல்லுங்கள், நூலகத்தின் மாயத்தன்மையின் புத்தக வாசமும், அறிவுச் சூழலும் நிச்சயம் உங்களை மீண்டும் அதை நோக்கி இழுக்கும். மெதுவாக ஒரு புத்தகத்தை கையில் எடுத்து அலட்சியமாக பார்ப்பீர்கள்.பின்னர், சில பக்கங்களின் மீது உங்கள் கண்கள் அலைபாயும். ஒரு வரி, பத்தி உங்களை ஈர்க்கலாம். மேஜையில் வந்து அமர்வீர்கள். முதல் பக்கத்தை படிப்பீர்கள். அது உங்களை உள்ளே இழுக்கும். பின்னர் என்ன? நீங்கள் ஒரு முழுமையான வாசகன் ஆவீர்கள். அதில் உள்ள சுகத்தை உணர்வீர்கள். ரசனை வளரும். ரசனையோடு உங்கள் பார்வையும் விரிவடையும்.

புதிதாக படிக்கும் வாசகர் என்றால் 100 பக்கங்களுக்குள் உள்ள புத்தகங்களை முதலில் தேர்ந்தெடுக்கலாம். முழுதாக படித்து முடிக்கும் அனுபவம் தான், அடுத்த புத்தகத்துக்கு உங்களை அழைத்து போகும். தினம் டிவி பார்ப்பது போல சில பக்கங்களை அசை போடுங்கள்.
சரி விஷயத்துக்கு வருவோம். 2026 சென்னை புத்தக கண்காட்சி தொடங்கி விட்டது. இது தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய புத்தக கண்காட்சி.
பல புத்தக விரும்பிகளுக்கு இது சொர்க்கம். பதிப்பகம் வாரியாக அரங்குகள் அமைத்து 10 சதவீத தள்ளுபடி விலையில் விற்பனை நடைபெறும். இதே போல உங்கள் ஊரிலோ மாவட்டத்திலோ வருடந்தோறும் நடக்கும். பயன்படுத்திக் கொள்ளலாம்.
இத்தனையும் பேசிவிட்டு தலைப்பிற்கு இணங்க நல்லதொரு தொடக்கத்திற்கு சில புத்தகங்களை குறிப்பிடாமல் போனால் நன்றாக இருக்காது. எனவே அவை கீழ்வருமாறு..
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் (நாவல்) - ஜெயகாந்தன்
தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்.'
எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொது மனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின் மூலம் இந்த வாழ்க்கையின் போக்கு குறித்த புரிதலை உணர்த்த முனையும் நாவல் இது.
ஒரு புளியமரத்தின் கதை (நாவல்) - சுந்தர ராமசாமி
தமிழ் நவீன இலக்கிய உலகில் பலருக்கும் பிடித்தமான நாவல் சுந்தர ராமசாமி எழுதிய ஒரு புளியமரத்தின் கதை. 1966-ல் முதல் பதிப்பு வெளிவந்த காலத்திலிருந்து வாசகர்கள் பலரால் தொடர்ச்சியாக வாசிக்கப்படும் நாவல். சுதந்திரத்திற்கு முன்னால் தொடங்கி, சுதந்திரத்திற்குப் பிற்பாடு வரையிலான ஒரு கால கட்டத்தை புளியமரத்தோடு பல நிகழ்வுகைளைத் தொகுத்து நமக்குக் காட்டும் நாவல் இது.
கடலுக்கு அப்பால் – ப.சிங்காரம்
இது இரண்டாம் உலகப் போரின் பின்னணியில், தமிழகத்திலிருந்து பர்மா, இந்தோனேஷியா, மலேசியா ஆகிய தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் பிழைப்பு தேடிச் சென்ற தமிழர்களின் வாழ்க்கை, காதல், பிரிவு மற்றும் துயரங்களை சித்தரிக்கிறது.
எழுத்தாளர் சி.மோகன் கூற்றுப்படி, ப. சிங்காரம், நவீன தமிழ் இலக்கிய எழுத்தாளர்களில் ஓர் அபூர்வ ஆளுமை. கதை மாந்தர்களின் மனமொழி தமிழில் இவரளவுக்கு எவரிடமும் இவ்வளவு அநாயசமாகக் கூடி வரவில்லை. மனக்குகை வாசல்கள் தாமாகவே திறந்து கொண்டு விட்டிருக்கின்றன. உணர்வுகளின் ரகசிய முகமூடிகள் கழன்று விழுந்து, உள்ளுக்குள் நடப்பதை அப்பட்டமாகக் காட்டுகின்றன. கடலுக்கு அப்பால் நாவலில் கடவுளின் மலர்ந்த சிரிப்பும் உள்ளுறைந்திருக்கின்றது.
புயலிலே ஒரு தோணி (நாவல்) - ப.சிங்காரம்
கடலுக்கு அப்பால் நாவலின் இன்னும் ஆழமான தொடர்ச்சி புயலிலே ஒரு தோணி. பிறந்த இடத்தில் தொலைத்த தங்களின் வாழ்க்கையை அந்நிய நிலத்தில் மீட்டெடுக்கப் போராடும் மனிதர்களை இதில் பார்க்க முடியும். அவர்களின் அன்றாட வாழ்க்கை ஒரு சாகசம் போலத் தெரியும்.
நிச்சயமற்ற வாழ்க்கையில் நிச்சமுள்ள ஒரு விஷயத்தைத் தேடிச் செல்லும் புலம்பெயர்ந்தவர்களின் வாழ்க்கையை இந்த நாவல் நம் கண்முன்னால் கொண்டு வருகிறது. 'மனதை இழக்காதவரை நாம் எதையும் இழப்பதில்லை' - புயலிலே ஒரு தோணி நாவலின் கடைசி வரி இது.
கோபல்ல கிராமம் (நாவல்) - கி.ராஜநாராயணன்
கரிசல் நிலத்தை, கரிசல் மக்களின் வாழ்வை, கரிசல் மண்ணின் வாசனையோடு பதிவு செய்யும் நாவல் இது. கரிசல் காட்டுக் கிராம மக்களின் பேச்சு வழக்கையும் சொலவடைகளையும் சரளமாகக் கையாண்டு வாய்மொழிக் கதை மரபில், புதிய வடிவத்தில் இந்த நாவலை உருவாக்கியுள்ளார் கி. ராஜ நாராயணன்.
எரியும் பனிக்காடு – மூலம் - Red Tea - பி.எச். டேனியல்
பாலாவின் "பரதேசி" திரைப்படத்தின் மூலவடிவமாக அமைந்த நாவல் இது. ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் கங்காணி முறையினை பயன்படுத்தி எப்படி சமூகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை அடிமைகளாக ஆனைமலைக் காட்டில், தேயிலை தோட்டங்களில் எப்படியாக சிறைபடுத்தினார்கள் என்பதை சித்தரிக்கும் வரலாற்றுப் புதினம்.
தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிந்தவர்களின் துன்பதுயரங்களை கண்முன் நிறுத்துகிறது. சாதிய, பாலியல், மற்றும் உழைப்பு சுரண்டல்களால் அன்றைய காலங்களில் மக்களின் வாழ்வு எப்படி சீர்குலைந்தது என்பதையும் அறிந்து கொள்ள முடியும்.
ஏழு தலைமுறைகள் (நாவல்) - அலெக்ஸ் ஹேலி
இது 18-ஆம் நூற்றாண்டில் கானாவில் இருந்து அமெரிக்காவிற்கு அடிமையாகக் கொண்டுவரப்பட்ட ஒரு கறுப்பின இளைஞனின் குடும்ப வரலாறு, அவர்களின் வேர்கள் மற்றும் அடிமைத்தனத்தின் கொடூரமான பாதிப்புகளை ஏழு தலைமுறைகளாக விவரிக்கும் ஆழமான, வேதனை நிறைந்த கதை.
1852 ஆம் ஆண்டில் வெளிவந்த 'அங்கிள் டாம்ஸ் கேபின்' நாவலுக்குப் பிறகு கடந்த நூற்றிருபது வருட நீண்ட காலத்தில் உலகத்தையே குலுக்கிய இது போன்ற புத்தகம் வேறெதுவுமே வந்ததில்லை.
- மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் மாநிலத்தின் முதன்மை அதிகார அமைப்பாக இருக்க முடியும்.
- இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் ஜனாதிபதி, ஆளுநர்களுக்கு காலக்கெடு விதிப்பது அரசியல் சாசனத்தின் நெகிழ்வுத்தன்மைக்கு எதிரானது.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டு இருந்தார்.
முக்கியமாக, மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வகை செய்யும் பல்கலைக்கழக திருத்த மசோதா உள்பட மொத்தம் 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைப்பதாக கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் 13-ந்தேதி அறிவித்தார்.

இதனால் அந்த மசோதாக்களை தமிழக அரசு, 2023-ம் ஆண்டு நவம்பர் 18-ந்தேதி சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. அவற்றை அவர் ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பினார்.
எனவே தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டை நாடியது. நிலுவையில் இருக்கும் மசோதாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனுவை தாக்கல் செய்தது.
இந்த மனுவை நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. நீண்ட கால விசாரணைக்குப்பின் கடந்த ஏப்ரல் 8-ந்தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது தமிழ்நாடு சட்டசபையில் 2-வது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பிய ஆளுநரின் நடவடிக்கை சட்டவிரோதமானது என நீதிபதிகள் அறிவித்தனர்.
மேலும் மசோதாக்கள் மீது முடிவு எடுப்பதில் ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது என்றும் அமைச்சரவையின் ஆலோசனையின்படியே செயல்பட வேண்டும் என்றும் கூறிய நீதிபதிகள், 10 மசோதாக்களையும் ஜனாதிபதிக்கு அனுப்பிய ஆளுநரின் நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
பின்னர் சுப்ரீம் கோர்ட்டுக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கும் சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி, ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்ட 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அத்துடன் சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு காலக்கெடு நிர்ணயித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதன்படி சட்டசபைகளில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என காலக்கெடு நிர்ணயித்தனர்.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வரவேற்றன.

அதேநேரம் இந்த தீர்ப்பு தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு 14 கேள்விகளை எழுப்பி சுப்ரீம் கோர்ட்டின் விளக்கம் கேட்டிருந்தார்.
இந்த கேள்விகள் தொடர்பாக 5 நீதிபதிகள் அடங்கிய சுப்ரீம் கோர்ட்டின் அரசியல்சாசன அமர்வு விசாரித்தது. தலைமை நீதிபதி கவாய், நீதிபதிகள் சூர்ய காந்த், விக்ரம் நாத், நரசிம்மா, சுந்துர்கர் அடங்கிய இந்த அமர்வில் நடந்த விசாரணை நிறைவடைந்து கடந்த செப்டம்பர் 11-ந்தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
நாடு முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த வழக்கில் கடந்த மாதம் 20-ந்தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜனாதிபதி எழுப்பியிருந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
அதன்படி மசோதாக்கள் மீது முடிவு எடுக்க ஜனாதிபதி மற்றும் மாநில ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது என நீதிபதிகள் அதிரடியாக தீர்ப்பு அளித்தனர்.
5 நீதிபதிகளும் ஒருமித்த வகையில் வழங்கிய தீர்ப்பில் அவர்கள் கூறியதாவது:-
மாநில சட்டசபைகள் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களை, ஆளுநர்கள் அரசியல் சட்டப்பிரிவு 200-ன் கீழ் தங்களுக்கு வழங்கப்பட்டு உள்ள அதிகாரத்தை மீறி நீண்ட காலம் கிடப்பில் போட முடியாது.
அந்தவகையில், மாநில அரசில் 2 நிர்வாக அதிகார மையங்கள் இருக்க முடியாது என பஞ்சாப் அரசுக்கு எதிராக ராம் கபூர் என்பவர் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே அளித்த தீர்ப்பில் உடன்படுகிறோம்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் மாநிலத்தின் முதன்மை அதிகார அமைப்பாக இருக்க முடியும்.
மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட அனுமதிப்பது என்பது சட்டசபை அதிகாரத்தை மதிப்பிழக்கச்செய்வதாகவும், கூட்டாட்சி கொள்கைக்கு எதிராகவும் அமையும் என கருதுகிறோம்.
அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200-ன் கீழ் மசோதாக்கள் தொடர்பாக ஆளுநர்களுக்கு 3 வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. அதாவது ஒப்புதல் அளிப்பது, ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பது அல்லது ஒப்புதலை நிறுத்தி வைப்பது, தனது கருத்துடன் சட்டசபைக்கு திருப்பி அனுப்புவது ஆகியவை.
இதில் ஒன்றை தேர்வு செய்தாக வேண்டும். இதில் மத்திய அரசு கூறுவது போல 4-வது வாய்ப்பு இல்லை. இதில் அமைச்சரவையின் ஆலோசனை இல்லாமல் தன் விருப்புரிமையுடன் செயல்பட முடியும்.
நிதி மசோதாவாக இல்லாத பட்சத்தில் அந்த மசோதாவுக்கான ஒப்புதலை நிறுத்தி வைக்க முடியும் அல்லது கருத்துகளுடன் சட்டமன்றத்துக்கு மீண்டும் அனுப்பி வைக்கலாம்.
அதேநேரம் இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் ஜனாதிபதி, ஆளுநர்களுக்கு காலக்கெடு விதிப்பது அரசியல் சாசனத்தின் நெகிழ்வுத்தன்மைக்கு எதிரானது.
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் அரசியல் சாசனத்தில் ஆளுநர்களுக்கு காலக்கெடு விதிக்காத நிலையில், சுப்ரீம் கோர்ட்டு கெடு விதிப்பது பொருத்தமாக இருக்காது.
மசோதாக்கள் சட்டமாகி நடைமுறைக்கு வராத நிலையில், அவை குறித்த ஆளுநர்கள், ஜனாதிபதியின் முடிவுகளை கோர்ட்டு விசாரணைக்கு உட்படுத்த முடியாது. சட்டமாகாத மசோதாக்களின் பொருளடக்கம் குறித்து கோர்ட்டு விசாரிக்க முடியாது.
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநர்களின் செயல்பாடுகள் கோர்ட்டு விசாரணைக்கு உட்பட்டதல்ல. எனவே, ஆளுநர்களின் முடிவுகளை கோர்ட்டுகள் ஆய்வு செய்ய முடியாது. இது மசோதாக்கள் மீது ஜனாதிபதி எடுக்கும் முடிவுகளுக்கும் பொருந்தும்.

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் அரசியல் சாசனத்தில் ஜனாதிபதிக்கு கெடு விதிக்காத நிலையில், சுப்ரீம் கோர்ட்டு விதித்த கெடு ஜனாதிபதியையும் கட்டுப்படுத்தாது.
இருப்பினும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநர்களின் காலதாமதம், விளக்கமற்ற நிலை நிலவும்போது குறிப்பிட்ட காலத்துக்குள் ஒப்புதல் அளிக்கும் வகையில், ஆளுநர்களின் விருப்புரிமை குறித்து கருத்து தெரிவிக்காமல் முடிவுகளை எடுக்க அளவான உத்தரவுகளை கோர்ட்டு பிறப்பிக்க முடியும்.
ஆளுநர்களுக்கு எதிராக உரிமையியல் வழக்கு தொடர முடியாத வகையில் அரசியல் சாசனத்தின் 361-வது பிரிவு பாதுகாப்பு அளித்துள்ளது. இருப்பினும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநர்களின் காலதாமதம், விளக்கமற்ற நிலை நிலவும்போது கோர்ட்டு அளவாக தலையிட முடியும்.
ஆளுநர்கள் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கும் ஒவ்வொரு மசோதாவுக்கும் ஒப்புதல் அளிப்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டின் ஆலோசனையை ஜனாதிபதி பெற தேவையில்லை.
அதேநேரம் மசோதா குறித்த தெளிவில்லாதபோது அல்லது சுப்ரீம் கோர்ட்டின் ஆலோசனை தேவைப்படும்போது, ஜனாதிபதி அரசியலமைப்பு சாசனத்தின் 143-வது பிரிவின் கீழ் சுப்ரீம் கோர்ட்டின் ஆலோசனையை கேட்டுப்பெறலாம்.
ஆளுநர்களின் அரசியலமைப்பு அதிகாரங்களையும், அவர்களின் உத்தரவுகளையும் சுப்ரீம் கோர்ட்டுக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் அரசியலமைப்புப்பிரிவு 142-ன் கீழ் எந்த வகையிலும் மாற்ற முடியாது.
அந்தவகையில் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்ததாக கொள்ளப்படும் என்ற கோட்பாட்டை சுப்ரீம் கோர்ட்டு சிறப்பு அதிகாரம் அனுமதிக்கவில்லை.
ஆளுநர்களின் ஒப்புதல் இல்லாமல் ஒரு மசோதா சட்டமாகுமா என்ற கேள்விக்கே இடமில்லை. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் சட்டமியற்றும் பணியை ஐகோர்ட்டுகளோ, சுப்ரீம் கோர்ட்டோ பறித்துக்கொள்ள முடியாது.
அரசியல்சாசன முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை குறைந்தபட்சம் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வு விசாரிக்க வேண்டும் என்ற விதி தொடர்பான கேள்வி நடைமுறைக்கு பொருத்தமற்றதாக இருப்பதால் பதில் அளிக்கவில்லை.
சுப்ரீம் கோர்ட்டின் சிறப்பு அதிகாரம் குறித்து ஏற்கனவே விரிவாக பதில் அளித்து விட்டதால், குறிப்பிட்ட பாணியில் பதில் அளிப்பது சாத்தியமில்லை.
மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நிலவும் தாவாக்களை தீர்வுகாணும் சுப்ரீம் கோர்ட்டின் வரம்பு எல்லை குறித்த கேள்வியும் நடைமுறைக்கு பொருத்தமற்றதாக இருப்பதால் பதில் அளிக்கவில்லை என்று தீர்ப்பில் விளக்கம் அளித்துள்ளது.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
- தொப்புள் கொடி உறவு என்பது வெறும் வார்த்தை பயன்பாடு மட்டும் அல்ல.
- எதையும் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லாத உன்னதான உறவு அது.
ஆண்டுதோறும் மே 24 (இன்று) சகோதரர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. தேசங்கள் கடந்த உலக பந்தமான இது மனித உறவுகளிலேயே தனித்துவமானது.
தாய், தந்தை ஆகிய பந்தங்கள் ஒரு சில உணர்வுகளுக்குள் வரையறுக்கப்பட்டவை. அன்பு, கோபம், நட்பு என அனைத்து உணர்வுகளையும் நம்மால் சுதந்திரமாக வெளிப்படுத்த முடிகின்ற ஒரே ஜீவன் சகோதரனே.
தொப்புள் கொடி உறவு என்பது வெறும் வார்த்தை பயன்பாடு மட்டும் அல்ல. நமக்காக யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வாழ்வின் அனைத்து கட்டங்களிலும் நம்முடன் நமது பக்கம் நிற்கும் சகோதரனிடத்தில் நமக்கு கிடைக்கும் பாதுகாப்புணவர்வுக்கு ஈடேதும் இல்லை.

சகோதரன் என்பவன் வாழ்நாள் நண்பன். சகோதரன் உடனான சிறுவயது குறும்புகள், சண்டைகள் அன்பின் வெளிப்பாடு. அன்பின் தனித்துவமான வெளிப்பாடுகள் அவை. ஒருவருக்கொருவர் எதையும் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லாத உன்னதான உறவு அது. எதிர்பார்ப்பின்றி உருவான உறவு.
இன்று உலகெங்கிலும் மனிதர்களுக்கிடையில் சகோதரத்துவத்தை பலரும் வலியறுத்துகின்றனர். ஏனெனில் நட்பை விட சகோதரத்துவத்தின் பிணைப்பு ஆழமானது.
ஒரு நல்ல நண்பன் நூறு சகோதரர்களுக்கு சமமாக இருக்கலாம். ஆனால் ஒரு நல்ல சகோதரன் ஆயிரம் நண்பர்களுக்கு சமம்.
- 2025-ம் ஆண்டு உலக புத்தக தினத்திற்கான கருப்பொருள் "உங்கள் வழியைப் படியுங்கள்" என்பதாகும்.
- புரட்சிப் பாதையில் கைதுப்பாக்கிகளை விட பெரிய ஆயுதம் புத்தகம் மட்டுமே - லெனின்
புத்தகங்களை விட சிறந்த நண்பன் வேறில்லை என்பதை புத்தக பிரியர்கள் மனமார ஒப்புக்கொள்வார்கள். அத்தகைய புத்தகங்களைக் கொண்டாட ஒரு தினம் அர்ப்பணிக்கப்படுகிறது.
1995 ம் ஆண்டு முதல் யுனெஸ்கோ அமைப்பு ஏப்ரல் 23 ம் தேதியை உலக புத்தக மற்றும் காப்புரிமை தினமாகக் கொண்டாடி வருகிறது.
உலக புத்தக தினம் என்றும் இது அழைக்கப்படுகிறது. சர்வதேச பதிப்பாளர்கள் சங்கம், சர்வதேச புத்தக விற்பனையாளர்கள் கூட்டமை மற்றும் நூலக சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து புத்தக தினம் கொண்டாடப்படுகிறது.

புத்தக தினமாக கொண்டாடப்படும் ஏப்ரல் 23 ம் தேதி, உலகப்புகழ் பெற்ற டான் குவிக்சாட் நாவலை எழுதிய எழுத்தாளர் செர்வாண்ட்ஸ் நினைவு தினம் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக மகாகவி வில்லியம் ஷேக்ஸ்பியர் மற்றும் இன்கா கார்சிலாசோ டி லா வேகா ஆகியோரும் இந்த தினத்தில் தான் மறைந்தனர். மேலும் விலாதிமீர் நொபோகோவ்ம் மவுரீஸ் டூரான், ஜோசப் பிளா உள்ளிட்ட எழுத்தாளர்களின் பிறந்த தினமாகவும் இது அமைகிறது.
உலக புத்தக தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் கண்காட்சி, கருத்தரங்கள் உள்ளிட்ட பலவேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
"ஒரு புத்தகம் என்பது கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்குமான இணைப்பு, தலைமுறைகள் மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையிலான பாலம்" என்கிறது யுனெஸ்கோ அமைப்பின் உலக புத்தக தினம் தொடர்பான இணைய பக்கம்.
2025-ம் ஆண்டு உலக புத்தக தினத்திற்கான கருப்பொருள் "உங்கள் வழியைப் படியுங்கள்" என்பதாகும். இந்தக் கருப்பொருள் குழந்தைகள் வாசிப்பை ஒரு வேலையாகப் பார்ப்பதற்குப் பதிலாக, தங்கள் சொந்த பாணியில் அதைக் கண்டறிந்து, அதில் மகிழ்ச்சி காண ஊக்குவிக்கிறது.
வாசிப்பை ஒரு மகிழ்ச்சிகரமான மற்றும் தனிப்பட்ட அனுபவமாக மாற்றுவதன் முக்கியத்துவத்தை இது வலியுறுத்துகிறது.
மேற்கோள்கள்:
புரட்சிப் பாதையில் கைதுப்பாக்கிகளை விட பெரிய ஆயுதம் புத்தகம் மட்டுமே - லெனின்
ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஊரில் ஒரு சிறைச்சாலை மூடப்படும் - விவேகானந்தர்
ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்? - ஒரு நூலகம் கட்டுவேன் - மகாத்மா காந்தி
எங்கே நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகின்றனவோ அங்கு விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள் - சேகுவாரா
இந்த உலகத்தை ஒழுக்கமற்றது என்று அழைக்கும் புத்தகங்கள்தான் உலகத்தின் அசலான வடிவத்தை நம்மிடையே காட்டுகிறது - ஆஸ்கர் ஒயில்ட்.
நீர் இன்றி அமையாது உலகு..என்பது நூற்றுக்கு நூறு உண்மை.
இன்று 'உலக தண்ணீர் தினம்'
உயிர்களின் அடிப்படை தேவையாக தண்ணீர் அமைந்து உள்ளது.உணவு தயாரிப்பது, குளிப்பது, குடிப்பது மற்றும் விவசாய உற்பத்தி, தொழிற்சாலை உற்பத்தி என மனிதனின் அன்றாட வாழ்வில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறதுஒரு நபருக்கு தினமும் 80 லிட்டர் தண்ணீர் சராசரியாக தேவைப்படுகிறது.
மக்கள் தொகை பெருக்கம்,தொழிற்சாலைகள் அதிகரிப்பு,உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது.உலகில் பல நாடுகளில் பல லட்சம் மக்கள் சுகாதாரமான குடிநீர், தண்ணீர் இல்லாமல் உள்ளனர்.

பூமியின் மேற்பரப்பில் இருக்கும் நீரில் 97.5 சதவீதம் உப்புத் தன்மையும் 2.5 சதவீதம் மட்டுமே நல்ல தண்ணீரும் உள்ளது.டெல்லி, ஐதராபாத், சென்னை, பெங்களூரு உளிட்ட பல்வேறு நகரங்களில் கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
பருவநிலை மாற்றம், மழைப் பொழிவு குறைவு மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு உருவாகிறது.

1992-ம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடந்த சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்த ஐ.நா சபை மாநாட்டில் ' உலக தண்ணீர் தினம்' முடிவு செய்யப்பட்டது.அதன்பேரில் 1993 முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 - ந்தேதி கொண்டாடப்படுகிறது.
இந்த. தினத்தில் பொதுமக்களுக்கு தண்ணீர் சேமிப்பு, அதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.அனைவருக்கும் சுகாதாரமான குடிநீர், நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு அவசியமாகும்.
தண்ணீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்துவோம்...நாளைய தலைமுறைக்கு தண்ணீர் தட்டுப்பாடு இல்லாது செய்வோம் என உறுதியேற்போம்.






