

கட்சித் தாவல் புகார் நிலுவையில் இருக்கும்போது, எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக் கொண்டிருக்கக் கூடாது என்று அ.தி.மு.க. எம்.பி. இன்பதுரை கூறி உள்ளார்.
அ.தி.மு.க. எம்.பி. இன்பதுரை நெல்லையில் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
6 தொகுதிகளில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்த விதம் தவறானது. சபாநாயகர் செயற்கையாக காலி இடங்களை உருவாக்கி உள்ளார். சபாநாயகர் தனது பதவியை தவறாக பயன்படுத்துகிறார். தனக்கு அதிகாரம் உள்ளது என்பதற்காக ஊஞ்சல் கட்டி ஆட முடியாது. கட்சித் தாவல் புகார் நிலுவையில் இருக்கும்போது, எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை அவர் ஏற்றுக் கொண்டிருக்கக் கூடாது. இது குறித்து நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். அந்த மனு மீதான விசாரணை நாளை மறுநாள் நடைபெற உள்ளது.
நாங்கள் சபாநாயகர் மீது குற்றச்சாட்டை முன்வைத்து, அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். சபாநாயகர் ஆளும் கட்சிக்கு துணை போகிறார். அந்தக் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாததால் வேண்டுமென்றே அவர் இதற்கு முன்பாக இருந்த அ.தி.மு.க.வில் இருந்து எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்து பெரும்பான்மையை நிரூபிக்க வைப்பதற்காக மீண்டும் போட்டியிட வசதியாக தமிழக வெற்றிக் கழகத்திற்கு வசதி செய்து கொடுக்கிறாரா? என்ற சந்தேகம் எழுகிறது.
மக்கள் தங்கள் வாக்குகளை முழுமையாக தமிழக வெற்றிக் கழகத்திற்கு அளிக்கவில்லை. நேற்று முதலமைச்சர் பேசிய கரூர் தொகுதி மக்கள் கூட அவரை புறக்கணித்துள்ளனர். அ.தி.மு.க.வை தான் வெற்றி பெற வைத்தனர். இந்த ஆட்சி ஒரு தற்காலிக மாயை. இது நீண்ட காலம் நீடிக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.