

இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள், மத்திய மந்திரிகள், எதிர்க்கட்சி தலைவர்கள், தேர்தல் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட 300 பேரின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக சர்வதேச நாளிதழ்கள் தெரிவித்து இருந்தன.
இதனால் நாடு முழுவதும் பெகாசஸ் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாராளுமன்றத்தில் இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் பிரச்சினையை கிளப்பினார்கள். இது குறித்து விவாதம் நடத்தி குழு அமைக்க வேண்டும் என்று முறையிட்டனர்.
பெகாசஸ் விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அல்லது நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
மூத்த பத்திரிகையாளர் இந்து ராம் உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. அப்போது ஒட்டு கேட்பு விவகாரம் உண்மையானதாக இருந்தால் அது மிகவும் தீவிரமானது என்று கருத்து தெரிவித்தது.
இது தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்றும் கடந்த விசாரணையின்போது உத்தரவிட்டு இருந்தது.
பெகாசஸ் உளவு புகார் குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது 2 பக்க பிரமாண பத்திரத்தை மத்திய அரசு தாக்கல் செய்தது.
அனுமானங்கள், ஆதாரமற்ற ஊடக அறிக்கைகளின் அடிப்படையில் பெகாசஸ் உளவு புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மத்திய தகவல் தொழில்நுட்ப துறை மந்திரி அஸ்வினி வைஷ்னவ் பாராளுமன்றத்தில் இது தொடர்பாக ஏற்கனவே விளக்கம் அளித்து விட்டார்.
பெகாசஸ் விவகாரத்தில் எழுப்பப்பட்ட அனைத்து பிரச்சினைகளையும் விசாரித்து ஆய்வு செய்ய நிபுணர்கள் குழு அமைக்கப்படும்.
இவ்வாறு அந்த பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்...இந்தியாவில் 54.58 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்