இரட்டை உருமாற்ற வைரஸ் பரவல் - இந்திய பயணிகளுக்கு ஜெர்மனி, இத்தாலி, வங்கதேசம் தடை

இந்தியாவில் இருந்து வைரஸ் தங்கள் நாட்டுக்கு பரவிவிடக்கூடாது என்பதற்காக பல நாடுகளும் உஷார் நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

புதுடெல்லி:

இந்தியாவில் இரட்டை உருமாற்ற கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் இருந்து வைரஸ் தங்கள் நாட்டுக்கு பரவிவிடக்கூடாது என்பதற்காக பல நாடுகளும் உஷார் நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

அதன்படி இந்தியாவில் இருந்து பயணிகள் வருவதற்கு இங்கிலாந்து, ஐக்கிய அரபு நாடுகள், கனடா, குவைத், ஓமன், ஹாங்காங், சவுதி அரேபியா, சிங்கப்பூர். இந்தோனேசியா ஆகிய நாடுகள் ஏற்கனவே தடை விதித்திருந்தன.

இப்போது ஜெர்மனி, இத்தாலி, மாலத்தீவு, வங்காளதேசம் ஆகிய நாடுகள் இந்திய பயணிகளுக்கு தடை விதித்துள்ளன.

இந்தியாவுக்கு சென்றுள்ள ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர்கள் மட்டும் நாடு திரும்ப ஜெர்மனி அனுமதித்துள்ளது. மற்ற யாரும் ஜெர்மனிக்குள் வரக்கூடாது என்று அறிவித்துள்ளது.

ஜெர்மனிக்கு ஏர் இந்தியா, லுப்தான்சா நிறுவனங்கள் விமானங்களை இயக்கி வருகின்றன. அவற்றின் விமான சேவை தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலி கடந்த 14 நாட்களாகவே இந்திய பயணிகளை அனுமதிக்கவில்லை. தங்கள் நாட்டு பிரஜைகள் மட்டும் கொரோனா இல்லை சான்றிதழுடன் திரும்பி வரலாம் என்று கூறி உள்ளது.

மாலத்தீவு நாளை (27-ந்தேதி) முதல் இந்திய பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று அறிவித்துள்ளது. இதேபோல் வங்காளதேசமும் இந்திய பயணிகளுக்கு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com