சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க லோக் ஆயுக்தாவிற்கு நீதிமன்றம் உத்தரவு

சித்தராமையா மீது வழக்கு தொடர கர்நாடக கவர்னர் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.கவர்னரின் உத்தரவை ரத்து செய்ய கோரி கர்நாடக ஐகோர்ட்டில் சித்தராமையா மனு தாக்கல் செய்தார்.
CM Siddaramaiah
Published on

கர்நாடகாவில் 'முடா' நில முறைகேடு தொடர்பாக முதல்-மந்திரி சித்தராமையா மீது ஊழல் வழக்கு தொடர சமூக ஆர்வலர்கள் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். அதனை பரிசீலித்த கவர்னர், கடந்த மாதம் 17-ந் தேதி சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

இதையடுத்து முதல்-மந்திரி சித்தராமையா, கவர்னரின் உத்தரவை ரத்து செய்ய கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் அந்த மனு மீது விரிவாக விசாரணை நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நேற்று நீதிபதி நாகபிரசன்னா, சித்தராமையாவின் மனு நிராகரிக்கப்படுவதாகவும், கவர்னரின் உத்தரவு செல்லும் என்றும் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார்.

இந்நிலையில் முடா ஊழல் தொடர்பாக முதல்வர் சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு லோக் ஆயுக்தாவிற்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் சித்தராமையா மீதான புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்து 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று லோக் ஆயுக்தாவிற்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு தொடர்பாக முதல்வர் சித்தராமையா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், "என்னை விசாரிக்க லோக் அயுக்தாவிற்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக ஊடகங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். நீதிமன்ற உத்தரவின் முழு நகலையும் படித்துவிட்டு விரிவாக பதில் அளிக்கிறேன்.

விசாரணையை எதிர்கொள்ள, சட்டப்போராட்டம் நடத்த தயாராக இருக்கிறேன். விசாரணைக்கு நான் அஞ்சப்போவதில்லை. அனைத்தயும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவெடுப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com