

சமூக வலைத்தளங்களில் தற்போது ஒரு புதிய அழகு சாதனப் பொருள் இந்திய அளவில் பெரும் விவாதத்தையும் வரவேற்பையும் பெற்று வருகிறது. அது வேறு எந்த ஒரு முன்னணி நிறுவனத்தின் தயாரிப்பும் அல்ல.
இந்திய மத்திய அரசின் ஜன அவுஷதி கேந்திராக்களில் விற்பனை செய்யப்படும் 'சாலிசிலிக் ஆசிட் ஃபேஸ் வாஷ்' தான் அது. மிகக் குறைந்த விலையில், முகப்பருக்களைக் கட்டுப்படுத்தும் அசாத்தியமான நன்மைகளை வழங்குவதால், இளைஞர்கள் மற்றும் ஸ்கின்கேர் பிரியர்கள் மத்தியில் இந்த தயாரிப்பு காட்டுத்தீ போல பரவி வருகிறது.
சந்தையில் முன்னணி பிராண்டுகளின் சாலிசிலிக் ஆசிட் ஃபேஸ் வாஷ்கள் பொதுவாக ரூ.150 முதல் ரூ.500 வரை விற்கப்படுகின்றன. ஆனால், மத்திய அரசின் பிரதான் மந்திரி பாரதிய ஜனவுஷதி பரியோஜனா திட்டத்தின் கீழ், இதன் 1% வேரியண்ட் ரூ.46.88-க்கும், 2% வேரியண்ட் ரூ.65.63-க்கும் மட்டுமே கிடைக்கிறது. இது சந்தை விலையை விட கிட்டத்தட்ட 70% முதல் 90% வரை குறைவாகும்.
குறைந்த விலை என்றதும் தரம் குறைவாக இருக்குமோ என்ற ஐயம் தேவையில்லை. இந்த தயாரிப்புகள் அனைத்தும் WHO-GMP மற்றும் NABL அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களால் சான்றளிக்கப்பட்டு, கடுமையான தரக்கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே சந்தைக்கு வருகின்றன.
சாலிசிலிக் ஆசிட் என்பது சரும துவாரங்களில் உள்ள அழுக்குகள் மற்றும் அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கி, முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் வராமல் தடுப்பதில் மிகச்சிறந்த மருத்துவக் காரணியாகக் கருதப்படுகிறது.
நெட்டிசன்கள் பலரும் தங்களது எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில், "இனி தேவையின்றி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம், அரசாங்கத்தின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது" எனப் பதிவிட்டு வருகின்றனர். மருத்துவ ரீதியாக பரிந்துரைக்கப்படும் இந்த ஃபேஸ் வாஷ், நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களுக்கும் தரமான சருமப் பராமரிப்பு கிடைக்க வழிவகை செய்துள்ளது.
இது சாலிசிலிக் ஆசிட் கொண்ட ஒரு மருத்துவத் தயாரிப்பு என்பதால், உணர்திறன் மிக்க சருமம் உள்ளவர்கள் அல்லது முதன்முறையாகப் பயன்படுத்துபவர்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அல்லது 'பேட்ச் டெஸ்ட்' செய்து பார்ப்பது நல்லது.
இந்த ஃபேஸ் வாஷை உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள ஜன அவுஷதி கேந்திராக்களில் நேரடியாகப் பெற்றுக்கொள்ளலாம். உங்களுக்கு அருகிலுள்ள கடையைக் கண்டறிய Janaushadhi Official Website மற்றும் https://janaushadhi.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள “Locate Kendra” பக்கத்தைப் பயன்படுத்தலாம்.
மக்களுக்கு மலிவு விலையில் மருந்துகளை வழங்குவதற்காகத் தொடங்கப்பட்ட ஜன அவுஷதி கேந்திராக்கள், தற்போது சாலிசிலிக் ஆசிட் ஃபேஸ் வாஷ், புரோட்டீன் பவுடர்கள் மற்றும் ஐசோட்ரெட்டினாயின் கேப்சூல்கள் போன்ற நவீன சுகாதார மற்றும் அழகுப் பராமரிப்புத் துறையிலும் தடம் பதித்து வருவது குறிப்பிடத்தக்கது.