

போபால்:
மத்திய பிரதேச மாநிலம் சிங்ரவுலி மாவட்டத்தில் உள்ள ஹராபிர்ஜி கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கும், சித்தி மாவட்டத்தில் உள்ள பமரியா கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.
இன்று காலை அவர்களது திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
சிங்ரவுலி மாவட்டத்தில் இருந்து சில வாகனங்களில் திருமண கோஷ்டியினர் புறப்பட்டு சித்தி மாவட்டத்துக்கு சென்றனர். மினி லாரி ஒன்றில் திருமணத்துக்கு வந்திருந்த 45 பேர் பயணம் செய்தனர்.
நேற்றிரவு 10 மணி அளவில் அந்த மினி லாரி சித்தி மாவட்டத்தில் உள்ள அமலியா எனும் கிராமம் அருகே சென்று கொண்டிருந்தது. அங்குள்ள ஆற்றுப் பாலத்தை மினி லாரி கடந்த போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து அங்கும் இங்குமாக ஓடியது.
கண் இமைக்கும் நேரத்துக்குள் அந்த மினி லாரி பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு ஆற்றுக்குள் கவிழ்ந்து விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 21 பேர் உயிரிழந்தனர்.
70 அடி உயரத்தில் இருந்து லாரி விழுந்து விபத்துக்குள்ளானதால் சுமார் 21 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மாவட்ட மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை மீட்புப் பணிகள் அனைத்தும் முடிந்தன.
விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று மத்திய பிரதேச மாநில முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் அறிவித்துள்ளார். காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.